V4UMEDIA
HomeNewsKollywood35 நாட்களும் தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் ; மகிழ்ச்சியில் மிர்னா

35 நாட்களும் தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் ; மகிழ்ச்சியில் மிர்னா

சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தற்போது திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இணைந்து அருமையான கம்பேக் கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த பலரும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் புகழ் வெளிச்சத்தையும் பெற்று வருகின்றனர்.

அப்படி ஒருவர்தான் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் மருமகளாக நடித்த மிர்னா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி மேனன் என்கிற மிர்னா, ஜெயிலர் படத்தின் மூலம் தனக்கு கிடைத்த வரவேற்பால் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து அவர் கூறும்போது, “என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை அளித்த இயக்குனர் நெல்சனுக்கு நன்றி. இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் எனக்கு மிகப்பெரிய அன்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு படத்தொகுப்பாளர் நிர்மலிடம் பேசும்போது கூட, இந்த படம் வெளியான பிறகு உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது.

ஒரு ஆர்டிஸ்ட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பது அனைவருக்கும் கனவாக இருக்கும். எனக்கு அது கொஞ்சம் சீக்கிரமே நிறைவேறி விட்டது. அவருடன் 35 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

லாலேட்டனுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. நேற்று இந்த படத்தை கேரளாவில் பார்த்துவிட்டு தான் வருகிறேன். சுனில் சாருக்கு அங்கே அவ்வளவு வரவேற்பு இருக்கிறது. அவர் அங்கே சென்றால் தூக்கி கொண்டாடி விடுவார்கள். இந்த படத்தை கேரளாவில் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். என் வாழ்க்கையில் ஜெயிலர் மிக முக்கியமான படம்” என்று கூறினார்.

Most Popular

Recent Comments