V4UMEDIA
HomeNewsKollywoodஒய் ஜி மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சூப்பர் ஸ்டார்

ஒய் ஜி மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சூப்பர் ஸ்டார்

சினிமாவில் நடிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாரோ அதே அளவு நாடகத்தை நடத்துவதற்கும் நகைச்சுவை நடிகர் ஒய் ஜி மகேந்திரன் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இப்போதும் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் தனது நாடகங்களை நடத்தி வருகிறார் ஒய் ஜி மகேந்திரன். அந்த வகையில் அவர் நடத்திய சாருகேசி நாடகம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன் இந்த நாடகத்தை நேரில் கண்டுகளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இதில் நடித்தவர்களை தனது இல்லத்திற்கே அழைத்து பாராட்டி விருந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த நாடகம் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற சாருகேசி நாடகத்தின் 50வது காட்சியில் வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசுகையில், “1975-ல் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க நான் சென்றபோது, என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது சாருகேசி நாடகத்தின் 50வது காட்சி விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறேன். இது எல்லாமே காலத்தின் செயல். நாகேஷ், ஜெயலலிதா, சோ, விசு போன்றவர்கள் யுஏஏ நாடகக்குழுவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இது மிகவும் கட்டுக்கோப்பான குழுவாகும். இதில் படித்தவர்கள், பல துறை வல்லுநர்கள் இருந்தனர்,” என்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்து இருந்தால் இந்த நாடகம் இன்னொரு வியட்நாம் வீடாக இருந்து இருக்கும், என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த ட்ராமாவை பொருத்தவரை கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், அவர்களது குணத்திற்கு உண்டான வசனங்களை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒய் ஜி மகேந்திரா போன்ற ஒரு நடிகரை சினிமா சரியாக பயன்படுத்தவில்லை,” என்று ரஜினிகாந்த் கூறினார்.

மேலும் இந்த நிகழ்வில் அவர் பேசும்போது “என் திருமணம் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் ஒய் ஜி மகேந்திரா தான். மது, அசைவ உணவு பழக்கம் போன்றவை ஒருகாலத்தில் என்னோடு ஒட்டி இருந்தன. வெஜிடேரியன்ஸை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும். என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா தான்,” என்று சூப்பர் ஸ்டார் கூறினார். புகை, மது போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விட்டு விடுமாறு அனைவரையும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.

ஒய் ஜி மகேந்திரா பேசுகையில், “ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரே நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரே கவிஞர் கண்ணதாசன், ஒரே ஒரு ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டாராக இருக்கு முடியும்,” என்று கூறினார். 

சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும். இந்த நாடகத்தை ஒய் ஜி மகேந்திரா இயக்கியுள்ளார்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இசை கலைஞனின் வாழ்க்கையை சுற்றி கதை நடக்கிறது. இந்த நாடகத்தை திரைப்படமாக எஸ் ஏ ஆர் பி பிக்சர் ப்ரொடக்ஷன்ஸ் (ஸ்ரீ அக்ரஹாரம் ராஜலக்ஷ்மி ப்ரொடக்ஷன்) தயாரிக்கவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்த் எஸ் சாய் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்க உள்ளதோடு கிரியேட்டிவ் இயக்குநராகவும் பங்காற்ற உள்ளார். ஒய் ஜி மகேந்திரா முதன்மை வேடத்தில் நடித்து இயக்குகிறார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Most Popular

Recent Comments