V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் தமிழில் பெயர் வைக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் ; இயக்குனர் பேரரசு கோரிக்கை

மீண்டும் தமிழில் பெயர் வைக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் ; இயக்குனர் பேரரசு கோரிக்கை

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் பணியாற்றிய எஸ்.ஏ.பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஸ்ட்ரைக்கர். இந்த படத்தில் கதாநாயகனாக ஜஸ்டின் விஜய் நடித்துள்ளார். கதாநாயகியாக வித்யா பிரதீப் நடிக்க, முக்கிய வேடத்தில் வேடங்களில் கஸ்தூரி, ராபர்ட் மாஸ்டர், அபிநய ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் பாடல்களுக்கான இசையை விஜய் சித்தார்த்தும் பின்னணி இசையை விடி பாரதி மற்றும் விடி மோனிஷ் ஆகியோரும் அமைத்துள்ளனர். ஒளிப்பதிவை மனீஷ் மூர்த்தி கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் சுசீந்திரன், பேரரசு, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் இமான் அண்ணாச்சி, பாரதமாதா மணிமாறன், நடிகர் ஆர்.எஸ் கார்த்திக், விஜய் டிவி புகழ் நவீன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசும்போது, “கலைஞர் கருணாநிதி காலத்தில் தமிழில் டைட்டில் வைத்தால் வரி விலக்கு உண்டு என்கிற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது வெளியான அனைத்து படங்களுமே தமிழில் டைட்டில் வைத்து வெளியாகின. அஜித்தின் காட்பாதர் படம் கூட வரலாறு என்று பெயர் மாற்றி வெளியானது. ஆனால் இப்போது பல படங்களுக்கு ஆங்கிலத்தில் தான் டைட்டில் வைக்கிறார்கள்..

நான் கூட இந்தப் படத்தின் ஸ்ட்ரைக்கர் என்கிற டைட்டிலை பார்த்ததுமே போராளி என்கிற படமாக இருக்குமோ என்று நினைத்து விட்டேன். அதனால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்ப்படங்களுக்கு தமிழில் டைட்டில் வைக்க வேண்டும் என்கிற சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். தமிழகம் தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது.. அதை வாழ வைக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கையை தமிழக அரசுக்கு வைத்தார்.

இயக்குனர் எஸ்.ஏ பிரபு பேசும்போது, “இந்த படம் பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை பிடித்து போனதால் படத்தின் கதாநாயகன் ஜஸ்டின் தான் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை ஆர்வமுடன் தேடினார். யூடியூப்பில் பார்த்த அஸ்வின் என்கிற குறும்படத்திற்கு இசையமைத்திருந்த விஜய் சித்தார்த்தின் இசையால் ஈர்க்கப்பட்டு அவரை இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வு செய்தோம்.

என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து நண்பராக தொடர்ந்து வரும் ஹரிசங்கர் ரவீந்திரன் இந்த படத்தின் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார். பெரிய பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்யலாமே என முதலில் தயாரிப்பாளர் தயங்கினாலும் ஹரிசங்கர் எழுதிய முதல் பாடலை பார்த்துவிட்டு அனைத்து பாடல்களையும் அவரே எழுதும்படி கூறிவிட்டார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் எனக்கு நீண்ட நாட்களாக நெருங்கிய பழக்கம் உள்ளவர் என்பதால் இந்த கதை குறித்து அவ்வப்போது அவரிடம் விவாதித்து அவரது ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டேன். இந்த படத்திற்கு பொருத்தமான டைட்டில் என்பதால், டோரா பட இயக்குனர் தாஸ் தான் அவரிடம் இருந்த இந்த ஸ்ட்ரைக்கர் டைட்டிலை எனக்காக கொடுத்தார்: என்று கூறினார்.

பாடலாசிரியர் ஹரிசங்கர் ரவீந்திரன் பேசும்போது, “கவிஞர் கண்ணதாசன் எழுதிய வசந்த கால நதியினிலே பாடல் போல, இந்த படத்தில் ஒரு பாடலை அந்தாதியில் எழுதியுள்ளேன். இதற்கு முன்னதாக பாசமலர், பொன்னூஞ்சல், வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் பாடல் எழுதியுள்ளேன். நீ வருவாய் என தொடரின் டைட்டில் பாடலை எழுதியது நான் தான். ஆனால் எதிலுமே என்னுடைய பெயர் இடம் பெறவில்லை.  இந்த படத்தில் தான் முதல் முறையாக எனக்கு பாடலாசிரியர் என்கிற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை எனது வாய்ப்புக்கான மேடையாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன்: என்று கூறினார்.

படத்தின் நாயகன் ஜஸ்டின் விஜய் பேசும்போது, “என்னுடைய பயணத்தை ஒரு விஜே ஆகத்தான் ஆரம்பித்தேன். காஞ்சனா, மெட்ராஸ் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்தேன். எனது நடிப்பிற்கு லாரன்ஸ் மாஸ்டர் தான் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தார். இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்திடம் அவரது தவறுகளை சுட்டிக்காட்டினாலும் அவரை பாராட்டினாலும் இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளக்கூடிய நல்ல மனிதர். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக எடுத்துள்ளோம். இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர்களில் விடி மோனிஷ் இந்த நேரத்தில் எங்களுடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.

Most Popular

Recent Comments