பாலிவுட்டில் கோலோச்சி வரும் மூன்று கான் நடிகர்களில் ஒருவர் தான் ஆமீர்கான். இதுவரை இவர் நடித்து வந்த இந்தி படங்களை இந்தி மொழியிலேயே பார்த்து ரசித்திருப்போம். இந்த நிலையில் தற்போது முதன்முறையாக ஆமீர்கான் நடித்துள்ள படம் ஒன்று நேரடியாக இந்தியில் வெளியில் ஆகும் ஒரே நாளில் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது.

ஆம். ஆமீர்கான் இந்தியில் நடித்துள்ள லால் சிங் சத்தா என்கிற படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கரீனா கபூர் கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா இடத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு, தமிழில் மிரட்டல் வில்லனாக ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருக்கும் அதுல் குல்கர்னி தான் திரைக்கதை எழுதி இருக்கிறார்.

இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் ஒரு விஷயத்தை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை ‘கட்’டடித்துவிட்டு அமீர் கானின் ‘ரங்கீலா’ படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர் கானின் ரசிகன். மாதந்தோறும் இரண்டு திரைப்படங்களையாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பலமுறை முயற்சித்தாலும், திரையுலக நண்பர்களுக்காக தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்தத் தருணத்தில் அமீர்கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் லால் சிங் சத்தா படத்தினை தமிழில் வெளியிடுவதற்காக எங்களை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் அதை முதலில் வேண்டாம் என்று மறுக்க நினைத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். இந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம்.

திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, ‘லால் சிங் சத்தா’ படத்தினை நீங்கள் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு படத்தை முழுவதும் பார்த்தோம். முன்னோட்டத்தில் பார்த்து ரசித்ததை விட, திரைப்படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. அமீர்கான் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்” என்றார்.


























