சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மிகப்பெரிய அளவில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து படம் வெளியாவதற்கு முன்பு இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த் சமீபத்தில் பெங்களூரு சென்று தான் பணிபுரிந்த அரசு போக்குவரத்துக் கழகத்தை பார்வையிட்டதுடன் அங்குள்ள தனது நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தார் .

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அருகில் உள்ள தனது பூர்வீகமான நாச்சிக்குப்பம் கிராமத்தில் தனது தாய் தந்தைக்கு நினைவிடம் கட்டியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கே சென்று அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது அவரது சகோதரர் சத்திய நாராயண ராவும் உடன் இருந்தார். அங்கே 15 நிமிடங்கள் மட்டுமே இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்குள்ள தனது உறவினர்களையும் தனது தோட்டத்தில் பணிபுரிபவர்களின் நலனையும் விசாரித்து விட்டு தகவல் தெரிந்து ரசிகர்கள் வருவதற்குள் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.