Home News Kollywood ஜெயிலர் படம் பார்த்துவிட்டு கண்கலங்கிய சிவராஜ்குமார்

ஜெயிலர் படம் பார்த்துவிட்டு கண்கலங்கிய சிவராஜ்குமார்

கன்னட திரையுலகில் கடந்த 30 வருடங்களாக முன்னணி நடிகராகவே நடித்து வருபவர் நடிகர் சிவராஜ்குமார். கன்னட திரையுலகின் பிதாமகன் என அழைக்கப்பட்ட நடிகர் ராஜ்குமார் குடும்பத்து வாரிசு என்றாலும் தனது திறமையால் இத்தனை வருட தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.

இது நாள் வரை கன்னடத்தில் மட்டுமே நடித்து வந்த சிவராஜ்குமார் முதல் முறையாக தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததன மூலம் தமிழ் திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளார்.

இந்த படத்தில் அவர் வந்து செல்லும் காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. குறிப்பாக படத்தின் இடைவேளைக்கு முன்பு சில நிமிடங்களும் கிளைமாக்ஸில் சில நிமிடங்களும் மட்டுமே வந்தாலும் அவருக்கான கதாபாத்திரம் மாஸாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக ரசிகர்களே அவரது கதாபாத்திரத்தையும் அவரது என்ட்ரியையும் கொண்டாடி வருகிறார்கள்.

அப்படி என்றால் கன்னடத்தில் உள்ள சிவராஜ்குமார் ரசிகர்களை பற்றி சொல்லவும் வேண்டுமா ? கர்நாடகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் பார்க்க வரும் கர்நாடகா ரசிகர்கள் இருந்தாலும் தங்களது அபிமான சிவராஜ்குமாரும் இந்த படத்தில் இருப்பதால் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாள் கழித்து இந்த படத்தை நடிகர் சிவராஜ்குமார் பார்த்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் தனது வாகனத்தில் ஏறுவதற்கு முன்பாக ரசிகர்களை நோக்கி கையை அசைத்து தனது நன்றியை தெரிவித்தார். அப்போது அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

அது மட்டுமல்ல இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே இந்த படம் கர்நாடகாவில் பெற்றுள்ள வரவேற்பு குறித்து வெளியான செய்திகளால் மகிழ்ச்சி அடைந்த சிவராஜ்குமார், படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு போன் செய்து தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.