HomeNewsKollywoodகாவல்துறை அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்ட விக்னேஷ் சிவன்

காவல்துறை அதிகாரிகளால் கௌரவிக்கப்பட்ட விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பக்கம் திரைப்படங்களை இயக்கி வந்தாலும் இன்னொரு பக்கம் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதியுடன் மிக நெருங்கிய நட்பில் இருக்கிறார். இதனால் தமிழக அரசு குறித்த கலை சேவையில் தன்னையும் இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடைபெற்ற உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான புரோமோ உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கி கொடுத்தவர் விக்னேஷ் சிவன் தான். இந்த நிலையில் தற்போது காவல்துறை எப்படி போதை பொருள் தடுப்பிற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து உருவாகியுள்ள, பள்ளி மாணவர்களின் டிரைவ் அகைன்ஸ்ட் ட்ரக்ஸ் என்கிற பெயரில் நடத்தப்பட்ட போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணர்வு ஆவணப்படங்களுக்கான போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களை பார்த்து அவற்றில் சிறந்தவற்றை தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை ஏற்று அதை திறம்பட முடித்துள்ளார்.

இதை தொடர்ந்து இன்று சென்னை மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட விக்னேஷ் சிவனை, காவல்துறை அதிகாரிகளும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பாராட்டி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையாக நடக்கும் குறும்பட போட்டி மற்றும் காமிக்ஸ் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனை மிக அற்புதமாக நடத்தும் காவல்துறை நண்பர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, காவல் துறை இணை ஆணையர் ரம்யா பாரதி மற்றும் பவன்குமார் ரெட்டி ஐபிஎஸ் ஆகியோருக்கு நன்றி. முக்கியமாக இந்தப் படங்களைப் பார்த்துத் தேர்வு செய்த திரைப்பட இயக்குநர் நண்பர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. சத்யம் தியேட்டரில் நிறையத் திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன் ஆனால் சமீபத்தில் நான் எந்த ஒரு திரைத்துறை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, ஆனால் இது போதைப்பொருளுக்கெதிரான குறும்பட போட்டி என்பதால் உடனே ஒப்புக்கொண்டு வந்தேன். போதைப்பொருளுக்கெதிரான சிறந்த முயற்சி இதை முன்னெடுத்த காவல்துறைக்கு என் பாராட்டுக்கள். விக்னேஷ் சிவன் போன வருடம் உலகம் வியந்து பார்த்த செஸ் ஒலிம்பியாட்டை தொகுத்து இயக்கியவர் அவர் தான். நானும் ரௌடிதான் படமெடுத்தவர் இங்கு இந்த விழாவை ஒருங்கிணைக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள். இப்போதெல்லாம் நிறையத் தவறான செய்திகள் வாட்ஸப் மூலம் மிக எளிதாகப் பரவி விடுகிறது. இங்கு இந்த மேடையில் மாணவர்களிடம் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை அறிந்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கான நல்ல செய்தியை இந்த குறும்படங்கள் சொல்கிறது. இதனை உருவாக்கிய அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகள். காவல்துறை இது போல் இன்னும் பல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அதைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசும்போது, ‘நானும் சின்ன வயசில் போலீஸ் ஆக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளேன், ஆனால் எனக்கு வாழ்க்கை வேறு பாதையைத் தந்துவிட்டது ஆனால் என்னையும் காவல்துறை நண்பர்கள் நெருங்கிய வட்டத்தில் வைத்திருப்பது மிக மகிழ்ச்சி. டிரக்ஸ் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்ன போது ரம்யா மேடமுடன் இந்த மாதிரி குறும்படம் எடுக்கலாம் எனச் சொன்னேன். கமிஷனரும் ஆர்வமாகி நல்ல முறையில் செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அந்த வகையில் இந்த குறும்பட போட்டிக்கு 300க்கும் மேலானவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பினார்கள். போதைப்பொருள் விழிப்புணர்விற்காக பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட படங்களில் 3 படங்களைத் தேர்வு செய்துள்ளோம் அவர்களுக்குப் பரிசளிப்பது மகிழ்ச்சி” என்று கூறினார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments