எண்பதுகளின் இறுதியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் தனது முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்தவர் நடிகை கௌதமி. அதன்பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து துறைகளிலும் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.
ஒரு கட்டத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். மின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை ஒதுங்கிய கௌதமி நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
இதில் கௌதமிக்கு மீண்டும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தாலும் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் அரசியல் மற்றும் சமூக சேவைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் என்கிற படத்தின் மூலம் மீண்டும் திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் கௌதமி.
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான குணசேகர் இயக்கத்தில் புராண படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் கௌதமி மாதா என்கிற தன்னுடைய பெயர் கொண்ட கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார் கௌதமி.
படத்தில் இவரது பங்களிப்பு குறித்து படக்குழுவினர் கூறும்போது, “கன்வா ஆசிரமத்தில் ஒரு புத்திசாலி துறவி. சகுந்தலாவுக்கு அன்பான வளர்ப்புத் தாய். சகுந்தலாவின் மிக முக்கியமான பயணத்தில் ஒரு நம்பகமான குரு” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.