V4UMEDIA
HomeNewsKollywoodவிஜயகாந்தின் 33வது திருமண நாளில் அவரை நேரில் சந்தித்து நெகிழ்ந்த எஸ்ஏ சந்திரசேகர்

விஜயகாந்தின் 33வது திருமண நாளில் அவரை நேரில் சந்தித்து நெகிழ்ந்த எஸ்ஏ சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞர் என்றும் கேப்டன் என்றும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் கோலோச்சி வந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக ஆக்ஷனில் தனக்கென ஒரு தனி பாதையை வகுத்துக்கொண்டு மும்மூர்த்திகளில் ஒருவராக வலம் வந்தார் விஜயகாந்த்.

அதைத் தொடர்ந்து அரசியல் களத்தில் இறங்கி மிகப்பெரிய அளவில் அதிரடி செய்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் உடல் நலம் குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாகவே வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவரது 33வது திருமண நாள். இதற்கு விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் நேரிலேயே சென்று விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தம்பதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஜயகாந்தின் திரையுலக பயணத்தில் தவிர்க்க முடியாத இரண்டு இயக்குனர்கள் என்றால் ஒருவர் எஸ் ஏ சந்திரசேகர், இன்னொருவர் மறைந்த இயக்குனர் ராம.நாராயணன்.

இதில் எஸ்.ஏ சந்திரசேகர் அதிரடி ஆக்சன் படங்களாக எடுத்து விஜயகாந்த்திற்கு மிகப்பெரிய அந்தஸ்தையும் வியாபார எல்லையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பது இன்றைய தலைமுறை ரசிகர்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதுமட்டுமல்ல விஜய் நடிக்க ஆரம்பித்த புதிதில் அவரை விஜயகாந்த் உடன் இணைத்து செந்தூரப்பாண்டி என்கிற படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் உள்ள ரசிகர்களிடம் விஜய் எளிதில் மனதில் பதிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த் தான் என்பதை மறுக்க முடியாது.

அந்த வகையில் ஒரு குருவின் ஸ்தானத்தில் இருந்து இன்று விஜயகாந்தின் திருமண நாளில் நேரில் சென்று வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Most Popular

Recent Comments