நடிகர் யோகிபாபு தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் தன்னை தேடி வந்தால் கதையின் நாயகனாக நடிப்பதற்கு தயங்குவதில்லை, அதுவும் தனக்கு பரியேறும் பெருமாள் என்கிற தனது தயாரிப்பு மூலமாக மிகப்பெரிய மரியாதை பெற்று தந்த இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் அவரது சகாக்கள் படங்கள் என்றால் உடனே ஒப்புக்கொண்டு விடுகிறார் நடிகர் யோகிபாபு.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/01-bommai-nayaki-3-1024x577.jpg)
அப்படி இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி படத்தில் நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். இவர்களுடன் ஜி.எம் குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கேபிஒய் ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/bommai-nayaki-9-1024x682.jpg)
சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே செல்வா படத்தொகுப்பை கவனித்துள்ளார். கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். வரும் பிப்ரவரி-3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித், படத்தின் நாயகன் யோகிபாபு, சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/bommai-naayagi-6-1024x682.jpg)
படத்தின் நாயகன் யோகிபாபு பேசும்போது, :இந்த படத்தில் இயக்குனர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நன்றி.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/bommai-naayagi-10-1024x682.jpg)
இந்த படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். இந்த படத்திற்காக இயக்குனர் ஷான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/bommai-naayagi-4-682x1024.jpg)
சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.. நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க” என்று இளம் படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுத்தார் யோகிபாபு.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித் பேசும்போது, “இந்த படத்திற்கு யோகிபாபுவை அழைத்து நடிக்க வைக்கலாம் என இயக்குனர் ஷான் என்னிடம் கூறியபோது முதலில் தயங்கினேன். காரணம் எனக்கு யோகிபாபுவை பரியேறும் பெருமாள் படம் பார்த்ததிலிருந்து அந்த கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருந்தது. அதேசமயம் பிசியான நடிகர்களின் பின்னால் போய் நிற்பது எனக்கு கொஞ்சம் டென்ஷனான விஷயம். அதனால் யோகிபாபுவிடம் நான் பேசமாட்டேன், அவர் இந்த கதை பிடித்து சம்மதித்து வந்தால் எனக்கு எந்த மறுப்பும் இல்லை என்று ஷானிடம் கூறினேன். பரியேறும் பெருமாள் படத்தில் பார்த்த யோகிபாபு கதாபாத்திரத்தின் நீட்சியாக தான் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படத்திலும் அதே போல நன்றாக நடித்துள்ளார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/bommai-naayagi-8-1024x682.jpg)
இந்த கதையை படிக்க சொன்னபோது பலரும் இந்த படம் குறித்து நெகட்டிவ் ஆகவே என்னிடம் கூறினார்கள். அப்போதே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்து விட்டேன். இந்த படத்தில் முக்கியமான ஒரு பிரச்சனையை கூறினாலும் அதை கழிவிரக்கத்துடன் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கழிவிரக்கம் பேசாத படமாக இது இருக்க வேண்டும் என விரும்பினேன். நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் தயாரிக்கும்போது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது..
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/bommai-naayagi-2-1024x682.jpg)
இரண்டரை வருடங்களுக்கு முன்பு சின்ன படங்களுக்கு ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இப்போது சின்ன பட்ஜெட் படங்களை அவ்வளவு எளிதில் ஓடிடியில் விற்க முடியாது. பெரிய படங்களைத்தான் அவர்கள் வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சம் பின்புலம் இருப்பதால் ஒடிடியில் வெளியிடுவது எளிதுதான். அதேசமயம் நிலைமை அப்படியே மாறி தியேட்டரில் வெளியிடுவதை விட ஓடிடியில் படங்களை வெளியிடுவது கஷ்டம் என ஆகிவிட்டது.
அதேபோல சிறிய படங்களுக்கும் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒடிடியில் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்கிற மனப்பான்மை உருவாகிவிட்டது” என்று கூறினார்.