நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனாலும் அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் நடிகர் கருணாகரன். இந்த நிலையில் சமீபத்தில் பயணிகள் கவனிக்கவும் என்கிற படம் வெளியானது. விதார்த் கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கருணாகரன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் மற்றவரின் குடும்பத்தில் மட்டுமல்ல தனது சொந்த வாழ்க்கையிலும் கூட எப்படி சிக்கலை உருவாக்கி கொள்ள முடியும் என்பதற்கு உதாரணமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கருணாகரன். நீண்ட நாட்களுக்கு பிறகு கருணாகரன் மீது இந்த படம் வெளிச்சம் பாய்ச்சி உள்ளது என்று சொல்லலாம்.

இதுகுறித்து நடிகர் கருணாகரன் கூறும்போது இனி வெளியாகும் எனது படங்கள் இதுபோன்று நல்ல கதையம்சத்துடன் கதாபாத்திரங்களுடனும் வெளியாகும் என உறுதியாகக் கூறுவேன்.. தற்போது பன்னிககுட்டி காட்டேரி ஜீவி-2 காசேதான் கடவுளடா என நான் நடித்துள்ள படங்கள் அனைத்துமே என்னுடைய நடிப்புத் திறமைக்கு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ள படங்கள்தான்.

இரண்டு வருட கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இப்போதுதான் மக்கள் தியேட்டரை நோக்கி கூட்டமாக வர ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் என்னுடைய படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான்” என்று கூறியுள்ளார் கருணாகரன்.


























