HomeNewsKollywoodகாலில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளேன் !! விரைவில் மக்களை சந்திப்பேன் - கமல்ஹாசன் அறிக்கை

காலில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளேன் !! விரைவில் மக்களை சந்திப்பேன் – கமல்ஹாசன் அறிக்கை

“என் மீது அன்பு கொண்டவர்களுக்கு ஓர் அறிவிப்பு” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை நேற்று (ஜனவரி 17) இரவு வெளியிட்டுள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 29ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வலது காலில் பொறுத்தப்பட்டிருந்த டைட்டேனியம் கம்பி அகற்றப்பட்டது. அதன்பின் சிறிது ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார். அது மட்டுமின்றி பிக் பாஸ் மற்றும் விக்ரம் படத்தின் டீஸர் ஷூட்டும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 17) இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அந்த அறிக்கையில், “தமிழகத்தை தலை நிமிரச் செய்ய ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறேன். ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து தமிழ் மக்களைச் சந்திக்கிருக்கிறேன்.

மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன்.

அதுபோலவே, கொரோனா பொதுமுடக்கத்தின்போது துவங்கிய பிக்பாஸ்- சீசன் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன், இதுவும் மக்களுடனான பயணம்தான், நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும், உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவைச் சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் சினிமா வேலைகளும் அரசியல் சேவைகளும் தொடர்ந்தன.

பிரச்சாரத்தை துவங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே காலில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன். மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையை தொழில்நுட்பத்தின் வாயிலாக போக்கிக்கொள்ளலாம். இந்த ‘மருத்துவ விடுப்பில்’ உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்திற்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும்.

என் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தப்படிதான் இருக்கும். இப்போது அது தொடரும். ஒளி பரவட்டும். உங்கள் நான்” என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments