V4UMEDIA
HomeNewsKollywoodநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவில் விவேக் பிரசன்னாவின் 'சர்ப்ரைஸ்' அவதாரம்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாவில் விவேக் பிரசன்னாவின் ‘சர்ப்ரைஸ்’ அவதாரம்

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் கிடைத்த  பாராட்டுக்கள் மற்றும் நேர்மறையான வரவேற்பு ஒட்டுமொத்த குழுவையும் மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒவ்வொரு யூடியூபர் (அ) கலைஞர்களும் தங்களது திரை இருப்பு மூலம் கைதட்டல்களையும் பாராட்டுகளையும் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் ஒரு ஆச்சரியமான ஷோஸ்டாப்பராக மாறியிருக்கிறது. அவர் வேறு யாருமல்ல நடிகர் விவேக் பிரசன்னா. மிகக்குறுகிய காலத்தில் நகைச்சுவை, வில்லத்தனம் மற்றும் குணச்சித்திர வேடம் என தனது பன்முக கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென ஒரு முக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த படத்தில் அவர் நடித்திருப்பதை பற்றிய விஷயத்தை வெளிப்படுத்தால் வைத்திருந்தனர் படக்குழுவினர். அவர் கதாபாத்திரம் படத்தின் மிகவும் ஆச்சரியமான அம்சமாக மாறியிருக்கிறது.

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, “படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராட்டப்பட்டதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்கிரிப்டை எழுதும்போது, வில்லன் கதாபாத்திரம் எங்கள் அனைவரையும் கவர்ந்தது. ஏனெனில் அவர் மீது தான் படத்தின் மையக்கருவே பபயணிக்கிறது. மற்ற கலைஞர்களை இறுதி செய்து, முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த பிறகும், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஒருவரை எங்களால் இறுதி செய்ய முடியவில்லை. தற்செயலாக, நகைச்சுவை கலந்து வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விவேக் பிரசன்னா பொருத்தமான தேர்வாக இருக்கும் என்று நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். மேலும், ‘மேயாத மான்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து நாங்கள் வியந்தோம். அதனால் அவர் சரியானவராக இருப்பார் என்று உணர்ந்தோம். அவர் நாங்கள் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டு, எங்கள் எதிர்பார்ப்புகளை மீறி, மிகச்சிறந்த நடிப்பை வழங்குகிறார். அந்த கதாபாத்திரத்தின் ஆடை மற்றும் கண்ணாடி உடன் ஸ்கிரீன் டெஸ்ட் செய்தபோது, நாங்கள் கற்பனை செய்த கதாபாத்திரத்திற்கு முழுமையான வாழ்க்கையை அவர் அளித்ததால் நாங்கள் முழு திருப்தி அடைந்தோம். விவேக் பிரசன்னா “நூறாவது நாள்” சத்தியராஜை நினைவுபடுத்துகிறார் என்பது மக்களிடமிருந்து கிடைத்த பொதுவான தீர்ப்பாகி விட்டது” என்றார்.

“எந்த இடமாக அல்லது எந்த நேரமாக இருந்தாலும், அவர் தனது நடிப்பை மேம்படுத்தி வழங்குவதில் சிறந்தவர். ரயில் நிலையம் போன்ற நெரிசலான இடங்களில் கூட, அவர் மிகவும் எளிமையாக இருந்தார். அந்த காட்சி சரியானதாக இருந்தபோதும், இன்னும் சிறப்பாக தர தானாக முன்வந்து பரிந்துரைப்பார். பெரும்பாலும் யூடியூபில் இருந்து வந்த புதிய கலைஞர்களை கொண்ட எங்கள் குழுவில், அவர் ஒரு போதும் தனது சீனியாரிட்டி மூலம் எந்த ஈகோவையும் காட்டவில்லை. அவரது அளவு கடந்த முயற்சி இல்லையென்றால், இந்த கதாபாத்திரம் இவ்வளவு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்காது. அவரது நடிப்பை மக்கள் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, குறிப்பாக ‘கொடியிலே மல்லிகைப்பூ’ பாடலில். அவர் ஏற்கனவே ஒரு சிறந்த நடிகர். சிறந்த குணசித்திர கலைஞராக அவரது அந்தஸ்து நிச்சயம் உயரும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத், விவேக் பிரசன்னா மற்றும் பல யூடியூப் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Most Popular

Recent Comments