கடந்த 2012ல் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான படம் 3. இந்தப்படத்தின் மூலம் நடந்தேறிய முக்கியமான நிகழ்வுகளும் மூன்று உண்டு. முதலாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அடுத்ததாக அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். மூன்றாவதாக ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார்.

இதில் அனிருத், சிவகார்த்திகேயன் இன்று புகழின் உச்சியில் உள்ளனர். அதேபோல ஸ்ருதிஹாசனுக்கும் இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து அங்கேயும் மிகப்பெரிய கதாநாயகியாக மாறினார். இந்த படம் வெளியாகி பத்து வருடங்கள் கழிந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ஆந்திராவில் சில திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் குறிப்பாக நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பை விமர்சகர்களும் பொதுப்பார்வையாளர்களும் பாராட்டி வருகிறார்கள்.

இதனால் உற்சாகமடைந்த ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் இதனை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள். தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் கே ஜி எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது


























