கடந்த 2012-ஆம் ஆண்டு கார்த்தி,பிரனிதா சுபாஷ்,சந்தானம் ஆகியோரது நடிப்பில் அரசியல் சார்ந்த திரைக்கதையுடன் ‘சகுனி’ திரைப்படத்தை கொடுத்த சங்கர் தயாள் நீண்ட இடைவெளிக்கு பிறகு நகைச்சுவை வள்ளல் செந்தில் மற்றும் யோகி பாபு ஆகியோரது நடிப்பில், தற்போது குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட அரசியல் திரைப்படத்தை துவங்கி உள்ளார்.
இத்திரைப்படத்தை மீனாட்சி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்பந்தம் மற்றும் இயக்குனர் சங்கர் தயாள் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஜெ.லக்ஷ்மண் ஒளிப்பதிவு செய்ய, ‘சாதக பறவைகள்’ சங்கர் இசையமைக்கிறார். செந்தில், யோகிபாபு, லிசி ஆண்டனி, சரவணன், ராகுல் உட்பட பலர் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் ஷங்கர் தயாள் கூறும்போது, “இது முழுவதும் குழந்தைகளை மையப்படுத்திய அரசியல் படம். சமூகத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும், அவர்கள் பார்வையில் சமூகம் எப்படி இருக்கிறது என்பதையும் கையாளும் திரைக்கதை ஆகும். இன்றைக்குத் தேவையான படமாக, யாரையும் காயப்படுத்தாத, ஜாலியான படமாக இது இருக்கும்” என்றார்.