V4UMEDIA
HomeNewsKollywoodநான்கு பக்க வசனம் பேசி நடிப்பால் விஷாலையே மிரட்டிய சுனில் ; மார்க் ஆண்டனி சுவாரஸ்யம்

நான்கு பக்க வசனம் பேசி நடிப்பால் விஷாலையே மிரட்டிய சுனில் ; மார்க் ஆண்டனி சுவாரஸ்யம்

மற்ற மொழிகளில் இருக்கும் திறமையான கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு தேடி அழைத்து வந்து  முக்கிய கதாபாத்திரங்களில் அவர்களை நடிக்க வைத்து அழகு பார்ப்பதில் தமிழ் இயக்குனர்களுக்கு நிகர் யாருமில்லை என்று சொல்லலாம். அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில்  தனது வித்தியாசமான நடிப்பால் முத்திரை பதித்தவர் தெலுங்கு காமெடி நடிகர் சுனில்.

அந்த படம் தமிழிலும் வெளியானதால் இங்கே சுநிளுகும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரபலம் கிடைத்தது. அவர் ஏற்கனவே தெலுங்கில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வந்தவர் தான். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில்  கதாநாயகனாகவும் நடித்தவர். இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்  ஜெயிலர் படத்தில் சுனில்  இணைந்து நடித்திருந்தார்.  இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் இன்னும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி மேலும் தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் அடுத்து  வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஷால், எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள இந்த படத்தில் சுனிலுக்கும் மிக முக்கியமான  கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் நடித்த போது  நடிகர் சுனிலுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் தனது பிரமிப்பை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறும்போது ஒவ்வொரு படத்திலும் எனக்கு ஒரு அனுபவம் கிடைக்கும். ஆனால் 20 வருடம் கழித்து என்னை வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு இந்த படத்தில் நடந்தது. நானும் நடிகர் சுனிலும் நடிக்கும் ஒரு காட்சியில் எனக்கு ஒரே வார்த்தை வசனம் மட்டும் தான். ஆனால் அவருக்கு நான்கு பக்க வசனம். அதை அவர் கோபம், கெஞ்சல், வருத்தம் ஆக்ரோஷம்  என  வெவ்வேறு விதமான முகபாவங்களுடன் நடித்துக் கொண்டிருந்தபோது என்னை அறியாமல் பிரமித்து போய் விட்டேன். அந்த காட்சி முடிந்ததும் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினேன். இந்த படத்தில் அவரது நடிப்பு,  பின்னால் நடிக்க வரும் நடிகர்களுக்கு  நிச்சயம் நிறைய விஷயங்களை கற்றுத் தரும். கூத்துப்பட்டறை மூலம் நடிகனாக வந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்” என்றார்.. 

Most Popular

Recent Comments