தமிழ் திரை உலக பொருத்தவரை நடிகர் சிவகுமாருக்கு அடுத்ததாக கலை உலக மார்க்கண்டேயன் என்று சொன்னால் அதற்கு பொருத்தமான நபராக நடிகர் ரகுமானை சொல்லலாம். அந்த அளவிற்கு கடந்த பல வருடங்களாகவே என்றும் மாறாத இளமையுடன் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.
இடையில் இவரது பயணத்தில் சற்று தொய்வு ஏற்பட்ட போது தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு என்கிற திரைப்படம் மீண்டும் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது.
அதைத்தொடர்ந்து தமிழில் வித்தியாசமான கதை அம்சங்களுடன் படம் தயாரிக்கும் பலரும் நடிகர் ரகுமானை தங்களது முதல் சாய்ஸாக மனதில் வைத்திருக்கின்றனர். மேலும் மலையாளத்திலும் பிசியாக நடித்து வருகிறார் ரகுமான்.
இந்த நிலையில் அவர் தற்போது தனது 55வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இவரது ரசிகர்கள் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் உள்ள ஒரு ஆதரவற்றோர் பெண்கள் இல்லத்திற்கு சென்று அங்கே அவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி, இனிப்பு வழங்கி அவரது பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.
மேலும் அங்கிருந்தவர்கள் நடிகர் ரகுமானுடன் பேச விருப்பம் தெரிவித்ததால் அவர்களது கோரிக்கையை ஏற்று வீடியோ காலில் வந்த ரகுமான் அனைவரிடமும் பேசி அவர்களை உற்சாகப்படுத்தியதுடன் அவர்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டார்.