இதற்குமுன் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் இணைந்து படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, தற்போது வெளியாகியுள்ள வாத்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் இந்தப்படத்திற்கு அற்புதமான பாடல்களை கொடுத்துள்ளார்.
இந்தப்படம் குறித்து பாரதிராஜா கூறும்போது, “என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கல்களை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்று இருக்கிறேன்.. அப்படி ஒரு பயணத்தின்போது நான் ஸ்தம்பித்து நின்ற இடம் தான் ‘வாத்தி’. கல்வி என்பது இந்த சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை வலியுறுத்தி சொல்கிறது இந்த வாத்தி.
தனுஷ் பொழுதுபோக்கிற்காக படம் நடித்தாலும் கூட அதில் சமுதாய நோக்கத்துடன் செயல்படுபவர். அப்படிப்பட்ட ஒரு பிள்ளை கிடைப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும். அவர் நடிகன் மட்டுமல்ல எழுத்தாளன், பாடகன், சிந்தனையாளன்.
ஒரு டீச்சர் எவ்வளவு அம்சமாக இருக்க வேண்டுமோ அப்படி ஒரு டீச்சருக்கான அம்சம் அப்படியே அவரிடம் இருக்கிறது.. ஒரு டீச்சருக்கான நடை உடை பாவனை உடல் மொழி என அனைத்தையும் தாங்கி நிற்கிறார் சம்யுக்தா. கிரேட்..
ஜி.வி.பிரகாஷ் இசையில் எல்லா பாடல்களும் இனிக்கின்றன. அவரெல்லாம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். நானும் ஜி வி பிரகாஷும் சேர்ந்து ஒரு படத்தில் கூட இணைந்து நடித்துள்ளோம். இந்த படத்தில் மட்டுமல்ல பல படங்களில் நான் அவரை கவனித்து வருகிறேன். இந்த வருடத்தில் அவரது இசைக்கும் நடிப்புக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
வாத்தி ஒரு நல்ல டைட்டில்.. ஒரு வாத்தியாரின் சமூக பொறுப்பு என்ன என்பதை அழகாக சொல்லி இருக்கிறது. நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்பதற்காக சொல்லவில்லை. வாத்தி திரைப்படம் ஒவ்வொருவரும் திரையரங்கம் சென்று பார்க்க வேண்டிய படம்.” என்று பாராட்டியுள்ளார்.