யூடியுப்பில் ஆபாசமாக தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டு பப்ஜி விளையாடி வந்த மதன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டு குறித்த டிரிக்ஸை முகத்தை காட்டாமல் ஆன்லைனில் விளையாடிக்கொண்டே விளக்குவதுதான் மதன் யூடியூப் சேனல். ஆனால், அந்த யூடியூப் சேனலில் விளையாட்டு பற்றி பேசுவதை விட பெண்களை பற்றி ஆபாச பேச்சுக்கள் அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது.ஆன்லைன் விளையாட்டில் வரும் மதன் சர்வசாதாரணமாக கெட்டவார்த்தைகளை பேசுவதும் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவதும் பப்ஜி விளையாடும் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றததால் தான் விரைவாகவே மதன் யூடியூப் சேனலுக்கு வருவாய் அதிகரித்ததாக கூறப்படுகின்றது.

இப்படி ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைக்கும் மதன் அவர்களை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வர சொல்லி இரவில் ஆடையின்றி வீடியோ சாட் செய்ய அழைப்பதாக சில வீடியோக்களும் இணையத்தில் உலா வருகின்றன.ஆணாக இருந்தால் கெட்டவார்த்தை உபயோகிப்பதும் பெண்ணாக இருந்தால் அந்தரங்கம் பற்றி கேட்டு பேசுவதையும் மதன் வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அவர் மீது பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஜாலியாக பேசி விளையாடினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று இவரைப் பின்பற்றி சில சிறுவர்களும் யூடியூப் சேனலை தொடங்க ஆபாசமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே, மதன் யூடியூப் சேனல் மீது ஆபாசமாக பேசுவது, பெண்களை இழிவாக பேசுவது தொடர்பாக கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அனுப்பப்பட்டது. மதன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் புகாரை ஏற்று விசாரணையை தொடங்கியது.அதையடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க நேரில் இன்று ஆஜராகுமாறு மதனுக்கு புளியந்தோப்பு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.ஆனால், இதுவரை மதன் ஆஜராகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மதன் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியது.தற்போது மதனின் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் போலீசார்.மேலும், தொழில்நுட்பங்களை நுணுக்கமாக பயன்படுத்துவதால் மதனை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மதன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், யூடியூபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.