கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக அனைத்து கடைகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் ஜிம் என அனைத்துமே மூடப்பட்டுள்ள நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள எனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி என்னால் கட்ட முடியாது என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு இன்று (அக்டோபர் 14) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரஜினிக்கு சொந்தமான திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை அங்கு சூப்பர்ஸ்டார் ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கவும் பயன்படுத்திக் கொள்வார்.
இந்நிலையில் இப்போது அந்த கல்யாண மண்டபத்துக்கான கடந்த 6 மாதத்துக்கான சொத்து வரியைக் கட்ட சொல்லி சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆனால் கடந்த 6 மாதமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்யாண மண்டபம் திறக்கப்படவே இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என ரஜினியின் சட்ட ஆலோசகர் விஜயன் சுப்ரமணியன் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,
‘ரஜினிகாந்த் தனது திருமணம் மண்டபத்துக்கு முறையாக சொத்து வரி செலுத்தி வருகிறார். இறுதியாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி சொத்து வரி கட்டியுள்ளார். பின்னர் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தியது.
இதைத்தொடந்து திருமண மண்டபம் 6 மாதங்களாக காலியாக உள்ளது. மார்ச் 24 முதல் யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. அனைத்து முன்பதிவுகளையும் ரத்து செய்து முறையாக பணம் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி, ரஜினிகாந்தின் திருமண மண்டபத்திற்கு ஏப்ரல் – செப்டம்பர் மாதத்திற்கான சொத்து வரியாக ரூ. 6.50 லட்சத்தை கட்ட வேண்டும் என கடந்த செப்டம்பர் 10ம் தேதி இன்வாய்ஸ் அனுப்பியுள்ளது.
எனவே பொதுமுடக்க காலத்தில் காலியாக இருந்த திருமண மண்டபத்திற்கு விதித்த சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என எனது மனுதாரர் கோரியுள்ளார். மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சிக்கு கடந்த செப்டம்பர் 23ம் தேதியே மனுதாரர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இதுவரை அதுகுறித்து மாநகராட்சி தரப்பில் இருந்து பதில் வரவில்லை’ என தெரிவித்துள்ளார்.