நடிகர் பிரபுதேவா தனது முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்று ஒதுங்கி தனியாகவே வாழ்ந்து வந்தார். இடையில் நடிகை நயன்தாராவுடன் காதல் என சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டார். அதன்பிறகு அந்த விஷயம் அடங்கிய நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் சத்தமே இல்லாமல் டாக்டர் ஹிமானி சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியம் அளித்தார் பிரபுதேவா.
அது கூட கடந்த ஏப்ரல் மாதம் முதன்முறையாக தனது மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தபோதுதான் இந்த விஷயமே வெளிச்சத்திற்கு வந்தது.

பிரபுதேவாவின் தற்போதைய மனைவியான ஹிமானி சிங் ஒரு பிசியோதெரபிஸ்ட். பிரபுதேவா தனது முதுகு வலி சிகிச்சைக்காக இவரிடம் சிகிச்சை பெற்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரபுதேவாவின் தந்தை சுந்தரத்திற்கு பிறந்த மூன்று பேருமே ஆண் பிள்ளைகள் தான். அதேபோல பிரபுதேவாவுக்கும் தனது முதல் மனைவி ரமலத் மூலமாக பிறந்ததும் மூன்று ஆண் குழந்தைகள் தான். அதில் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
இந்த நிலையில் முதன்முதலாக பிரபுதேவாவின் வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை நுழைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரபுதேவாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.