தென்னிந்திய திரையுலகம் மட்டுமல்லாது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களையும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒரு நடன இயக்குனராக ஆட்டி வைத்து வருபவர் பிருந்தா மாஸ்டர். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான். காஜல் அகர்வால் நடித்த ஹே சினாமிக்கா என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தினார். அதை தொடர்ந்து இரண்டாவது படமாக தக்ஸ் என்கிற படத்தை தற்போது இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு இன்னொரு பிரபல ஹீரோவை நடிக்க ஒப்பந்தம் செய்வார் என எதிர்பார்த்தால் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் மகனான ஹிருது ஹாரூண் என்பவரை இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார் பிருந்தா மாஸ்டர்.
மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் பாபி சிம்ஹாவும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் பத்தரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய பிருந்தா மாஸ்டர், “ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாக, சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது.
இப்படத்தில் மிகச்சிறந்த பாடலையும், அட்டகாசமான பின்னணி இசையையும் தந்த சாம் சிஎஸ்க்கு நன்றி. படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்த எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பிரியேஷ் படத்திற்கு அற்புதமான விஷுவல்ஸ் கொடுத்துள்ளார்.
பாபி சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஓய்வு நேரத்தில் கூட அவர் கேரவனுக்குள் நுழைய மாட்டார், மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் எப்போதும் இருப்பார் அவரது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
ஆர்.கே. சுரேஷ் சார் மற்றும் முனிஷ்காந்த் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக இருந்தனர். இந்த நேரத்தில் உதவி இயக்குநர் ராமை நினைத்துக் கொள்கிறேன். அவர் இப்போது எங்களுடன் இல்லை, அவரது உழைப்பு படத்தில் இருக்கிறது. முழு திரைப்படத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. என்று கூறியுள்ளார்
















