சுற்றுலா செல்லும் நண்பர்கள் சந்திக்கும் விபரீதங்களைப் பற்றிய கதை தான் ‘ட்ரிப்’ .
ஒரு காட்டுக்குள் காரில் செல்லும் ஓர் இளஞ்ஜோடியை மர்ம மனிதர்கள் சிலர் வழி மறித்து படுகொலை செய்கிறார்கள்.
அதே காட்டுக்குள் நாயகன் பிரவீன் குமார், நாயகி சுனைனா என நண்பர்கள் குழு சுற்றுலா செல்கிறார்கள். வழியில் ரத்தக்கறையுடன் இருக்கும் யோகிபாபுவையும் கருணாகரனையும் பார்த்து நண்பர்கள் குழு பயப்படுகிறார்கள். அன்று இரவு யோகிபாபு, கருணாகரன் ஆகியோரிடம் சுனைனா சிக்கிக்கொள்ள, அவரை அவர்கள் காட்டு பங்களாவுக்குத் தூக்கி செல்கிறார்கள். சுனைனாவை தேடிச் செல்லும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக படுகொலை செய்யப்படுகிறார்கள். சுனைனா நண்பர்களை கொலை செய்தது யார்? சுனைனா காப்பாற்றப்பட்டாரா இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அறிமுக நாயகன் பிரவீன் குமார் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நாயகி சுனைனாவை காப்பாற்ற முயலும்போதும், நண்பர்களை பறிகொடுக்கும் போதும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்கிறார். நாயகியாக வரும் சுனைனா மிக கடுமையாக உழைத்து நடித்திருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலம் யோகிபாபு. இவரது டைமிங் காமெடி பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. போலீசாக இரண்டு காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார் மொட்டை ராஜேந்திரன்.
நண்பர்களாக வரும் கல்லூரி வினோத், வி.ஜே சித்து, ராகேஷ், லக்ஷ்மி பிரியா, ஜெனிபர் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.