V4UMEDIA
HomeNewsKollywoodநடிகர் கிருஷ்ணா மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி இரங்கல் ; சரத்குமார் நேரில் அஞ்சலி

நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி இரங்கல் ; சரத்குமார் நேரில் அஞ்சலி

தெலுங்கு திரையுலகில் 70களில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் கிருஷ்ணா. இவரது மகன் மகேஷ் பாபு தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகர் கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவிற்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் இவரது மறைவு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி தனது இரங்கல் அறிக்கையில் கூறும்போது, “நடிகர் கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு சினிமாவிற்கு பெரும் இழப்பு. அவருடன் மூன்று படங்களில் நடித்த நினைவுகள் எப்போதும் போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் சரத்குமார், நேரிலேயே சென்று நடிகர் கிருஷ்ணாவுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். அவருடன் அவரது மகள் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் உடன் சென்று இருந்தார்.

நடிகர் கிருஷ்ணா தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அது சுசிகணேசன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கந்தசாமி திரைப்படம் தான். அதில் அவர் சிபிஐ உயர் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments