நடிகர் பரத் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மிரள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். ராட்சசன் படத்தைத் தயாரித்த டில்லிபாபுவின் ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்துள்ளது. வாணி போஜன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார்.
வரும் நவ-11ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அந்த மிக சுவாரசியமான விஷயம் ஒன்றை இயக்குனர் பகிர்ந்துகொண்டார்.
அதாவது இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிப்பவர் 8 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அப்போது தயாரிப்பாளர் வாணிபோஜனின் புகைப்படத்தை இயக்குனரிடம் காட்டி இந்த பெண் சரிப்பட்டு வருவாரா பாருங்கள் எனக் கேட்டுள்ளார்.
போட்டோவை பார்த்ததுமே எனக்கு பிடிக்கவில்லை என கூறி விட்டார் இயக்குனர் சக்திவேல். இருந்தாலும் நேரில் ஒருமுறை பாருங்கள் அதன் பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று அனுப்பி வைத்துள்ளார் தயாரிப்பாளர்.
ஆனால் ஆச்சரியமாக நேரில் பார்த்ததுமே வாணிபோஜன் தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என இயக்குனர் மனதில் தோன்றிவிட்டது.
இருந்தாலும் வாணிபோஜனிடம் பேசும்போது இந்த கதையை நான் சொல்வதற்கு முன்பு 8 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உங்களுக்கு சம்மதம் என்றால் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
அப்படி இடைவேளை வரை கதையை கூறியதும் அதோடு இயக்குனரை நிறுத்தச் சொன்ன வாணிபோஜன், போதும் இனி கதை சொல்ல வேண்டாம் இந்த படத்தில் நான் நடிக்கிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனை.. இனி இந்த கதையை வேறு எந்த நடிகையிடம் சொல்லக் கூடாது என்றார்.
அப்படி ஒரு போட்டோவை பார்த்து தவறாக ஒரு நல்ல நடிகையை மிஸ் பண்ண இருந்தார் இயக்குனர் சக்திவேல். அதேபோல இந்த கதையை மிஸ் பண்ணி விடக்கூடாது என்பதற்காகவே வேறு எந்த நடிகையிடமும் இந்த கதையை சொல்ல வேண்டாம் என கூறிவிட்டார் வாணி போஜன்.
இப்படி நடிப்புக்காக, கதாபாத்திரத்திற்காக தங்களை மாற்றிக் கொள்ளும் நடிகைகள் வெகு சிலரே. அதில் வாணி போஜனும் ஒருவர்.