கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கன்னடத்தில் காந்தாரா என்கிற படம் வெளியானது ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி அவரே இந்த படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். கிராமங்களில் இன்றும் கொண்டாடப்படும் குலதெய்வ வழிபாடும் அந்த குலதெய்வத்தின் பெருமை பற்றியும் பேசும் விதமான கதையம்சத்துடன் இந்த படம் உருவாகி இருந்தது.

இது கன்னடத்தில் மட்டுமல்லாமல், வாய்மொழியாக இந்த படத்தின் பெருமைகள் பரவ ஆரம்பித்ததால், அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

இந்த மொழிகளிலும் கூட இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக திரையுலக பிரபலங்கள் இந்த படத்தின் மேக்கிங் குறித்து தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்புகளில் என்று இதற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “தெரிந்ததை விட தெரியாதவையே அதிகம். சினிமாவில் இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது” என்று தயாரிப்பு நிறுவனத்தை பாராட்டி உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “காந்தாரா திரைப்படம் என்னை உற்சாகத்தின் உச்சியில் நிற்க வைத்திருக்கிறது. படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டிக்கு ஹேட்ஸ் ஆப்.. இந்திய சினிமாவின் ஒரு தலைசிறந்த படத்தை கொடுத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள்”. என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள ரிஷப் ஷெட்டி, “நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். சிறுவயது முதலே உங்களின் ரசிகன் நான். உங்கள் பாராட்டு மூலம் என் கனவு நனவாகியுள்ளது. உள்ளூர் கதைகளை படமாக்க இந்த வாழ்த்து என்னை மேலும் தூண்டியுள்ளது” என்று பதிலளித்துள்ளார்.