மலையாள நட்சத்திரங்களான பஹத் பாசில், அபர்ணா பாலமுரளி இருவரும் மலையாளத்தில் பிரசித்தி பெற்று இருந்தாலும் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கிய இருந்தனர். பின்னர் அபர்ணா பாலமுரளி, 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால் அதன்பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவருக்குப் புகழ் வெளிச்சம் கொடுத்தது. அதுமட்டுமல்ல சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.

அதேபோல நடிகர் பஹத் பாசில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் அந்தப்படம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை. அதேசமயம் கடந்த வருட இறுதியில் தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படமும் இந்த வருடம் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படமும் பஹத் பாசிலின் புகழை தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமல்லாது மொத்த தென் இந்திய மொழியிலும் உயர்த்தியுள்ளது.

இந்த நிலையில் பஹத் பாசில், அபர்ணா பாலமுரளி இருவருமே முதன்முறையாக தூமம் என்கிற கன்னட படத்தின் மூலம் கன்னடத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் பவன் குமார் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான, தமிழில் கூட ரீமேக் செய்யப்பட்ட லூசியா மற்றும் யூ டர்ன் ஆகிய படங்களை இயக்கியவர் .இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மகேஷின்டே பிரதிகாரம் என்கிற படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாகத்தான் அபர்ணா பாலமுரளி அறிமுகமானார். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும், அதிலும் கன்னடத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.