சுந்தரபாண்டியன் படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராக திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அதற்கு முன்னதாக இயக்குனர் சசிகுமார் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார் நடித்த படத்தையே இயக்கி அறிமுகமானார்.

இந்த நிலையில் சமீபத்தில் தாமதமாக அறிவிக்கப்பட்ட தமிழக அரசு விருதுகளில் சுந்தரபாண்டியன் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருது இவருக்கு கிடைத்துள்ளது. விருதுபெற்ற சந்தோஷத்தில் இருக்கும் எஸ்ஆர் பிரபாகரன் தற்போது தான் இயக்கிவரும் படங்கள் மற்றும் சினிமா தற்போது இருக்கும் சூழ்நிலை குறித்து எல்லாம் மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

“சுந்தர பாண்டியன் படத்திற்கு மாநில விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காலதாமதமானலும் விருது பெற்றத்தில் மகிழ்ச்சியே. சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதும் போது விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. படம் மிகவும் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே படத்திற்கு கதை அமைத்தேன்.

பெரும்பாலான மக்கள் பேருந்தில் பயணிப்பதால் படத்திலுள்ள பேருந்துப் பயணக் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை எளிதாக கதைக்குள் இழுத்துச் சென்றது. சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார் அவர்களுக்கு இணை இயக்குனராக இருந்தேன். சசிகுமார் சாரும் மிகவும் யதார்த்தமான பாணியில் கதையமைக்கக் கூடியவர். சசிகுமார் சார் “சுந்தர பாண்டியன்”படத்தை தயாரித்து நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

சிறந்த வில்லனுக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றிருக்கிறார். ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அவர் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைத்துப் படமும் ஹிட் அடித்து வருகிறது. அதற்கான பிள்ளையார் சுழி “சுந்தர பாண்டியன்” படத்திலிருந்து போடபட்டது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

சசிகுமார் சாரை வைத்து தற்போது முந்தானை முடிச்சு படத்தை ரீமேக் செய்து வருகிறேன். இது எனக்கு சசிகுமார் சாருடன் மூன்றாவது படம். இப்படத்தில் பாக்யராஜ் சார் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்து வருகிறார்.
அதற்கடுத்து தான்யா ரவிச்சந்திரனை வைத்து “ரெக்கை முளைத்தேன்” என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். அது ஒரு இளைஞர்களுக்கான கிரைம் த்ரில்லர் படமாக இருக்கும். மேலும், ரூரல் பொலிட்டிகல் கிரைம் கதையாக “கொலைகார கைரேகைகள்”என்ற இணையத் தொடரை ஜீ5 நிறுவனத்திற்காக இயக்கி வருகிறேன். இதில் கலையரசன், வாணி போஜன் நடித்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாத் துறையில் நடிகர் நடிகைகளின் அசிஸ்டண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களே சம்பளம் தர வேண்டும் என்ற தீர்மானம் சரியானதும் வரவேற்கத்தக்கதும் கூட. தமிழ் சினிமாவில் இதைப் பற்றி அனைத்து தயாரிப்பாளர்களின் மனதில் எண்ணம் இருந்தாலும், இந்த பேச்சை முதலில் யார் எடுப்பது என்ற தயக்கம் தான்.
ஏனென்றால், நடிகர்களுக்கே அவர்களின் அசிஸ்டண்டுகளை பற்றி முழுமையாக தெரியாது. அவர்கள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். நாள் ஒன்றிற்கு 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கேட்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு படத்திற்கு 25 லட்சம் வரை அவர்களுக்கு மட்டுமே சம்பளத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இது பல நடிகர்களுக்கு தெரியாது. இது பற்றி நடிகர்களிடம் நம்மால் கேட்கவும் முடியாது.
மேலும், நடிகர்களுக்கு சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதியாக இருக்கிறது. இதைப் பற்றி தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் இயக்குனருக்கு குறைந்த செலவில் படம் எடுக்கும் வேண்டும் என்ற அழுத்தம் வராது. கிரியேட்டருக்கு படத்திற்காக பட்ஜெட் அதிகம் கிடைத்து படம் மேலும் சிறப்பாக வரும்”. என்று கூறியுள்ளார் எஸ் ஆர் பிரபாகரன்