நடிகர் அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லரும் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஸ்னீக் ஸ்பீக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் காவல் துறையில் பணியில் சேரும் ஒவ்வொருவருக்கும் அந்த துறையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கும் வழக்குகளில் ஏதோ ஒன்றை தேர்வுசெய்து, அதை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும் என உயர் அதிகாரி அசைன்மென்ட் கொடுக்கிறார். அதன்படி அருள்நிதி கண்ணை மூடிக்கொண்டு ஒரு நெடுஞ்சாலை வழிப்பறி கொள்ளை சம்பந்தமான பைலை கையில் எடுப்பதாக அந்த ஸ்னீக் பீக் முடிகிறது.

யூட்யூபில் வெளியாகி மிகவும் வரவேற்பு பெற்றுள்ள இந்த வீடியோவுக்கு அதன் கீழே ஆயிரக்கணக்கில் கமெண்ட் அளித்துள்ள ரசிகர்களில் 90% பேர் குறிப்பிட்டுள்ள ஒரே ஒரு விஷயம், அருள்நிதியின் கதைத்தேர்வு குறித்து தான், நீங்கள் மட்டும் எப்படி இவ்வளவு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள் என ஒவ்வொருவருமே தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதை பார்க்க முடிகிறது.

பொதுவாகவே அருள்நிதி நடிக்கும் படங்கள் செலக்ட்டிவாகத்தான் இருக்கும். அந்தப்படம் வெற்றியோ, தோல்வியோ, சூப்பர்ஹிட்டோ அது வேறு விஷயம்.. ஆனால் விறுவிறுப்பாக, இரண்டு மணி நேரம் ரசிகர்களை போரடிக்காமல் படம் பார்க்க வைப்பதாக அவரது படங்கள் இருக்கும் என்பதையும் ரசிகர்கள் தவறாமல் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில், தமிழ் சினிமாவில் அருள்நிதி தான் கிங் என்றும் சிலர் கூறியுள்ளனர்.