நடிகர் விஜய் தனது முப்பது வருட திரையுலக பயணத்தில் முதல் முறையாக தற்போது தான் நேரடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க முக்கிய வேடங்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. இந்தநிலையில் படப்பிடிப்பு சமயத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட குரூப் புகைப்படம் ஒன்றை பிரகாஷ்ராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது வெளியான புகைப்படத்தில் இருக்கும் விஜய்க்கும் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் இருக்கும் விஜய்க்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்பாக தெலங்கானா முதல்வரை சந்தித்தபோது விஜய் இளமையான தோற்றத்தில் இருந்ததாகவும் தற்போது எடுக்கப்பட்டுள்ள குரூப் புகைப்படத்தில் சற்றே வயதான தோற்றத்தில் அவர் காட்சி அளிப்பதாகவும் அதனால் அவர் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.