90களில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நுழைந்து 100 படங்களுக்கு மேல் நடித்து, தேவன் என்கிற ஒரு படத்தையும் இயக்கி இயக்குனராகவும் மகுடம் சூட்டிக்கொண்டவர் நடிகர் அருண்பாண்டியன். அதன்பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி, தயாரிப்பு நிறுவனம் துவங்கி பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த வருடம் அருண்பாண்டியன் தயாரிப்பில் உருவாகி இவரும் இவரது மகளும் இணைந்து நடித்த அன்பிற்கினியாள் என்கிற படம் வெளியானது. அந்தப்படத்தில் தனது மகள் கீர்த்தி பாண்டியனுக்கே தந்தையாக நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து மீண்டும் நடிக்கலாம் என முடிவெடுத்து கிட்டத்தட்ட 10 கதைகள் கேட்டவருக்கு இரண்டே கதைகள் தான் மனதிற்கு பிடித்து இருந்தனவாம். அதில் ஒன்று சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம்.. இன்னொன்று அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் டைரக்சனில் கருணாஸுடன் இணைந்து நடித்துள்ள ஆதார் படம்.
ஆதார் படத்தின் கதையை இயக்குனர் ராம்நாத் சொன்னதுமே உடனே ஒப்புக்கொண்ட அருண்பாண்டியன் என்னிடம் இப்போது சொன்ன கதையை அப்படியே படமாக்கி விடுவீர்கள் தானே என அவரிடம் கேட்டு உறுதி பெற்ற பின்பே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நானும் இந்த படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார் அருண்பாண்டியன்.