சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச் சென்ற ரஜினிக்கு 100 ரூபாய் ஃபைன் போடப்பட்ட விவகாரம் சமீபத்தில் சர்ச்சையானது. இதில் சம்மந்தப்பட்ட காவல்துறை இன்ஸ்பெக்டர் பழனி என்பவர், ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருப்பதுதான் தற்போதைய தகவல் .
சீட் பெல்ட் அணியாமல் ரஜினி கார் ஓட்டிச் சென்றாரா? நடந்தது என்ன ?
லாக் டவுன் காலத்தில் சென்னை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து, கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த் . பண்ணை வீட்டுக்கு சென்று வருவதையும், அங்கு தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்து வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
அப்படி செல்கிறபோது ரஜினியின் காரை அவரது டிரைவர்தான் ஓட்டிச் செல்வார். அப்படி ஒரு முறை செல்கிறபோது தாழம்பூர் சிக்னல் அருகே ரஜினியின் கார் மறிக்கப்பட்டது. டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததை கேள்வி எழுப்பினார் இன்ஸ்பெக்டர் பழனி.
காரை விட்டு கீழே இறங்கிய டிரைவர், சீட் பெல்ட் அணியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார். கார் யாருடையது என்பது குறித்து இன்ஸ்பெக்டர் கேட்டபோது எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தார் டிரைவர். அதேசமயம், இன்ஸ்பெக்டருக்கு தூரத்தில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், ஆர்.டி.ஓ. அலுவலகத்துடன் இணைந்துள்ள தனது கையில் இருந்த எலெக்ட்ரானிக் சாதனத்தில் காரின் நெம்பரையும், 100 ரூபாய் ஃபைனையும் டைப் செய்ய காரின் உரிமையாளர் ரஜினிகாந்த் என்றும், காரின் மற்ற விபரங்களையும் சொன்னது. அந்த ரசிதை அப்படியே பிரிண்ட் எடுத்து இன்ஸ்பெக்டரிடம் நின்றிருந்த டிரைவரிடம் தந்தார் அந்த பெண் போலீஸ். அவரும் 100 ரூபாயை கட்டி விட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.