
காவேரி மருத்துவமனையானது ஸ்ரீ காவேரி மெடிக்கல் கேர் என்ற பெயரில் 1997-ஆம் ஆண்டு மருத்துவர் எஸ்.சந்திரகுமார் மற்றும் மருத்துவர் எஸ்.மணிவண்ணன் ஆகியோரால் துவங்கப்பட்டது. காவேரி மருத்துவமனை என்பது தமிழ்நாட்டின் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்நோக்கு மருத்துவமனை ஆகும். இந்நிறுவனத்தின் கிளைகள் திருச்சி,சென்னை,சேலம், திருநெல்வேலி,காரைக்குடி,ஒசூர் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களில் அமைந்துள்ளன. இந்த மருத்துவமனை சென்னையில் ஏற்கனவே ஆழ்வார்பேட்டை மற்றும் அண்ணாநகர் ஆகிய இரண்டு இடங்களில் செயல்படுகிறது. தொடர்ந்து நான்காம் நிலை உயர்தர வசதியுடன் கூடிய மூன்றாவது கிளை மார்ச் 20, 2024-அன்று சென்னையின் சுகாதார முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் வடபழனி, ஆற்காடு சாலையில் சிறப்பு விருந்தினர் ‘சூப்பர் ஸ்டார்’ திரு.ரஜினிகாந்த் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் மருத்துவர் எஸ்.சந்திரகுமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் மருத்துவர் எஸ்.மணிவண்ணன் செல்வராஜ், காவேரியின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநரான மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் உள்ளிட்டோர், நமது மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இந்த பிரமாண்டமான மருத்துவமனையுடன், அவர்கள் 9 சிறப்பு மையங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இணையற்ற சுகாதார சேவையை வழங்குவதற்கான அவர்கள் உறுதிப்பாட்டை மேலும் உயர்த்துவதாகவும், வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையால் உருவாக்கப்பட்டுள்ள நான்காம் நிலை உயர்தர வசதிகள், சிக்கலான சுகாதார நிலைமைகளை துல்லியமாகவும் அக்கறையுடனும் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் புதுமையான நடைமுறைகளை உள்ளடக்கிய சிறப்பு மருத்துவப் பராமரிப்பின் மிக உயர்ந்த நிலையைப் பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார்கள்.

இம்மருத்துவமனையை துவக்கி வைத்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பேசும்பொழுது,”நான் கடந்த 25 வருடமாக எந்தவொரு கல்லூரி, கட்டிட திறப்பு விழாக்களிலும் பங்கேற்கவில்லை. நான் இப்படியான விழாக்களில் கலந்துகொண்டால் அந்த நிறுவனத்திற்கு நான் பங்குதாரர், என்னுடைய பங்கு அதில் இருக்கிறது என்று கூறுவார்கள். ஒரு விழாவில் கலந்துகொண்டால் தொடர்ந்து கூப்பிடுவார்கள் என்று நான் எந்த விழாக்களிலேயும் பங்கேற்பதில்லை. விஜயா மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனை தொடங்கி சிங்கப்பூர் , அமெரிக்காவிலுள்ள மருத்துவமனைகளுக்கெல்லாம் இந்த உடல் சென்று வந்திருக்கிறது. எனக்கு மருத்துவர்கள் மீதும், செவிலியர்கள் மீதும் நல்ல மரியாதை இருக்கிறது. அவர்களின் உதவியாலும் முன்னணி தொழில்நுட்ப வசதிகளாலும்தான் நான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

இங்கே இருக்கும்போது பழைய நினைவுகளெல்லாம் எனக்கு வருகிறது. இங்கு உள்ள பகுதியில்தான் ஏ.வி.எம் ஸ்டூடியோ இருக்கும். ஒரு முறை ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக இந்த இடத்தில் ஒரு வீடு இங்கே கட்டினார்கள். அந்தப் படத்தை அமரர்.விசு சார் எழுதி இயக்கியிருந்தார். தலைசிறந்தவர் அவர். அந்தப் படம் முதலீடு செய்த பணத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக வசூல் செய்தது. அதற்கு பிறகு இது ஒரு ராசியான வீடு என்று எல்லோரும் நினைத்தார்கள். இதே இடத்தில் பல படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அந்த படமெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கு. என்னுடைய சில படங்களின் படப்பிடிப்பும் இதே இடத்தில் நடந்திருக்கிறது. அந்த படமெல்லாம் சூப்பர் ஹிட்டாகியிருக்கு. எல்லோரும் இந்த வீடு ரொம்பவே ராசியானது என நினைத்தார்கள். அப்படியான இடத்தில்தான் இப்போது இந்த காவேரி மருத்துவமனை திறந்திருக்கிறார்கள். அவர்கள் மேன்மேலும் வளர்ச்சியடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

மருத்துவமனைக்கு நோயாளியாக அல்லது நோயாளியை பார்ப்பதற்கு வருவார்கள். நான் ஒரு முறை நோயாளியாக ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கே இருக்கும்போது, ஒரு பெரிய அறுவை சிகிச்சை ஒரு நாளைக்குள் செய்தாக வேண்டும் என்று கூறினார்கள்.அதற்குள் என்னுடைய தனிப்பட்ட மருத்துவர் ரவிச்சந்திரன், என்னுடைய உடல்நிலையை பற்றி தெரிந்துகொண்டு உடனடியாக வந்து பார்த்தார். ‘உங்களுக்கு யார் அறுவை சிகிச்சை செய்ய போகிறார்?’ என்று கேட்டார். ‘மருத்துவர் சேகர் அறுவை சிகிச்சை செய்ய போகிறார்’ என்று சொன்னேன். உடனடியாக அவர் பாசிடிவ் சிக்னல் கொடுத்து இங்கேயே செய்யுமாறு அறிவுறுத்தினார். அடுத்ததாக அறுவை சிகிச்சை அறையில் செல்லும் சமயத்தில் ’99 சதவிகிதம் அறுவை சிகிச்சை வெற்றி அடைந்து விடும்’ என்று மருத்துவர் சேகர் கூறினார். எனக்குள் அந்த ஒரு சதவிகிதம் குறித்துதான் யோசனை இருந்தது. மயக்க மருந்து கொடுக்கும் வரைக்கும் எனக்குள் அந்த சிந்தனைதான் முழுமையாக இருந்தது. அதற்கு பிறகு கண் விழித்து பார்க்கும்போது அறுவை சிகிச்சை வெற்றி என்று கூறினார்கள். அங்க வேலை பார்த்த செவிலியர்கள், பணியாட்கள் எல்லோரும் ஒரு பாசிட்டிவிட்டி கொடுத்தார்கள். அதை வைத்தே தெரிந்தது, இந்த மருத்துவமனையின் நிர்வாகிகள் தங்கள் ஊழியர்களை எந்த அளவிற்கு அவர்களின் தேவைகளை நிறைவு செய்து அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள் என்று. ஒழுக்கம், நேர்மை, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மனிதனுக்கு முக்கியம். இப்படியான விஷயங்கள் ஒரு மனிதனிடம் இருந்தால் அவர் எந்த துறையில் இருந்தாலும் அவர் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறுவார்.இந்த நான்கு முக்கியமான விஷயங்களும் காவேரி மருத்துவமனையிடம் இருக்கிறது.

முன்பெல்லாம் ‘காவேரி மருத்துவமனை எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால் ‘கமல்ஹாசன் வீட்டுப் பக்கத்தில் இருக்கிறது’ என்று கூறுவார்கள், இன்றைக்கு ‘கமல்ஹாசன் வீடு எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால், ‘காவேரி மருத்துவமனை பக்கத்தில் இருக்கிறது’ என்று கூறுகிறார்கள்”, என சிரித்தவர்,” இது சும்மா சொல்கிறேன். இதற்கு கமல்ஹாசன் எதுவும் நினைத்துக் கொள்ள வேண்டாம். ஊடகத் துறையினர் யாரும் ‘கமல்ஹாசனை கலாட்டா செய்கிறேன்’என்று எழுதி விடாதீர்கள்” என்றார்.

மேலும், “இங்கே பேச வேண்டாம் என்று நினைத்தேன். ‘கொஞ்சம் ஊடகத் துறையினர் வருவார்கள். சிறிது நேரம் பேசுங்கள்’ என்று என்னிடம் கூறினார்கள். இங்கே வந்து இத்தனை கேமராக்களை பார்த்தவுடன் எனக்கு சிறிது அச்சமாக இருந்தது. இது தேர்தல் நேரம் வேறு . மூச்சு விடக்கூட அச்சமாக உள்ளது” என கலகலப்பாக பேசினார்.
மேலும்,”இம்மருத்துவமனைக்கு திருச்சி,சென்னை,சேலம்,திருநெல்வேலி,காரைக்குடி, ஒசூர் மற்றும் பெங்களூரு போன்ற மற்ற இடங்களிலும் கிளை மருத்துவமனைகள் உள்ளன. இவர்கள் மேன்மேலும் வளர வேண்டும். ‘THINK GLOBALLY ACT LOCALLY’ என்பதைப் போல உலகத்தின் பல்வேறு தொழில்நுட்பங்களும் தலைசிறந்த மருத்துவர்களும் ஒரு சேர இம்மருத்துவமனையில் கிடைக்கப் பெறுகிறது. சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குவது தமிழர்களுக்கு மிகவும் பெருமையாகும்.நம்மைச் சுற்றிலும் உள்ள காற்று,நிலம்,நீர் போன்றவை மாசடைந்துள்ளடைப் போல, கலப்படமாகியுள்ளதைப் போல, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் கூட கலப்படம் செய்கிறார்கள்.அதில் கலப்படம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப் பட வேண்டும்” என்று கோபமாக வேண்டுகோள் வைத்தார்.
இறுதியாக அவர் பேசும்போது,”இம்மருத்துவமனையில் உள்ள உலகத்தரம் வாய்ந்த வசதிகள் ஏழைகளுக்கும் கிடைக்க நிர்வாகிகள், தொண்டு மற்றும் சேவை மனப்பான்மையில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கேட்டுக் கொண்டார்.