கடந்த 30 வருடங்களாக பட்டிமன்ற பேச்சாளராக மிகப்பெரிய அளவில் புகழ் பெற்று, தற்போதும் முன்னணியில் இருப்பவர் திண்டுக்கல் ஐ லியோனி. ஆசிரியரான இவர் பின்னர் சில படங்களில் நடிகராகவும் நடித்தார். தற்போது இவரது மகன் லியோ சிவகுமார் அழகிய கண்ணே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சஞ்சிதா செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆர் விஜயகுமார் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் சீனு ராமசாமியின் சிஷ்யன் ஆவார். இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஜூன் 23ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திண்டுக்கல் ஐ லியோனி பேசும்போது, “இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள் , விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி, நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார், படக்குழு அனைவருக்கும் நன்றி, என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான், பல முயற்சிகள் செய்தான் அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும், படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

நாயகன் லியோ சிவகுமார் பேசும்போது, “இந்த மேடை எனக்குக் கனவு, சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு அதற்கு எனக்குச் சுதந்திரம் அளித்ததற்கு, என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது, எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி, இந்தப் படத்திற்குக் கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். , எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார், இந்த படம் எனக்கு முதல் படி” என்று கூறினார்.