மலையாளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 2018 என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், ஆசிப் அலி என மலையாளத் திரையுலக இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சூரரைப்போற்று படம் மூலம் தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நிவின்பாலி, நஸ்ரியா இருவரும் இணைந்து நடித்த ஓம் சாந்தி ஒசானா என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 2018ல் கேரளாவையே உலுக்கிய மாபெரும் வெள்ள சேதத்தை மையப்படுத்தி, அதிலிருந்து கேரள மக்கள் எப்படி மீண்டனர் என்பதை ஒரு அழகான திரைக்கதையாக உருவாக்கி இந்த படம் வெளியானது.
ஆச்சரியமாக இந்த படம் வெளியான 10 நாட்களிலேயே 100 கோடி என்கிற பிரம்மாண்ட வசூலை எட்டியுள்ளது. இந்த படம் மொழி தாண்டி அனைவரையும் கவரும் விதமாக உருவாகி இருந்ததால் இந்த வாரம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாகி உள்ளது.

நடிகர் டொவினோ தாமஸ் ஏற்கனவே மாரி 2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர். அதுமட்டுமல்ல மலையாளத்தில் மின்னல் முரளி என்கிற படத்தில் சூப்பர்மேன் ஆக நடித்து இன்னும் அதிக ரசிகர்களை இங்கே தமிழ்நாட்டிலும் பெற்றுள்ளார்.

தற்போது 2018 படம் தமிழகத்தில் வெளியாகியுள்ள நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு படக்குழுவினர் அனைவரும் வருகை தந்து ரசிகர்களை சந்தித்தனர். படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு பல குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.