ஒரு பக்கம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தேடி வரும்போது மறுக்காமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் வெளியான தசரா படத்தில் அவரது கதாபாத்திரமும் அதற்கு அவர் வழங்கிய நடிப்பும் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டை பெற்றது. இந்த நிலையில் தற்போது கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தமிழில் முதன்முறையாக அடி எடுத்து வைத்து தயாரித்து வரும் ரகு தாத்தா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்தப் படத்தை ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கி உள்ளார். எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து படப்பிடிப்பு தளத்தில் இறுதி நாள் என்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.

தனது மக்களுக்காகவும், தன்னுடைய நிலத்தின் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவும் ஒரு பெண் மேற்கொள்ளும் கடினமான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.

கொள்கை மற்றும் ஆணாதிக்கத்திற்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய ஒரு கடுமையான கலகக்கார இளம் பெண்ணின் கதை தான் ரகு தாத்தா படமாக உருவாகி உள்ளது