கடந்த 2016ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி தாணு. முதன்முதலாக பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அந்த பட்டத்தை சூட்டிய அந்த அதிர்ஷ்டசாலி கலைப்புலி தாணு தான். அவருக்கு தான் கொடுத்த வாக்குறுதிப்படி கபாலி படத்தில் நடித்துக் கொடுத்தார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கி இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வித்தியாசமான கெட்டப்பில், தனது வயதுக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கேரக்டரும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டன.
குறிப்பாக படத்தின் ஆக்சன் காட்சிகளும் நெருப்புடா என்கிற பாடலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன. இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு அவருடைய வழக்கமான கமர்ஷியல் பாணியில் இந்த படம் இல்லையே என்கிற மனக்குறையும் இருந்தது அப்போது வெளிப்பட்டது.
அவர்களுக்கு மட்டுமல்ல படத்தை தயாரித்த கலைப்புலி தாணுவுக்கும் கூட அந்த மனக்குறை இப்போதும் உண்டு என்பது அவரது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிய வந்துள்ளது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கலைப்புலி தாணுவுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் பா ரஞ்சித்தின் படைப்பு உருவாக்கத்தில் நாம் தலையிட வேண்டாம் எனக் கூறியதால் எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார் கலைப்புலி தாணு.
ஆனாலும் படம் வெளியான பிறகு அந்த கிளைமாக்ஸ் தான் சற்று விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கபாலி படம் குறித்து கூறியுள்ள கலைப்புலி தாணு, ஆளவந்தான் படத்தை தான் ரீ எடிட்டிங் செய்து இன்றைய ரசிகர்கள் ரசிக்கும் விதமாக மாற்றி வெளியிடும் பணியை செய்துவருவது போல, கபாலி படத்தையும் ரீ எடிட் செய்து புது வெர்ஷன் ஒன்றை வெளியிட இருப்பதாகவும் ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.