சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டி இருக்கிறது. இந்த படத்தில் இணைந்துள்ள தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட உள்ளூர் நட்சத்திரங்களுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட வெளியூர் முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படம் டபுள் மாஸாக இருக்கும் என சொல்லப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல இந்த படத்தில் பணியாற்றி வரும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தில் பணியாற்றிய தங்களது அனுபவம் குறித்தும் படம் எப்படி வந்திருக்கிறது என்பது குறித்தும் அவ்வப்போது சில க்ளூக்களை மட்டும் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த படத்திற்கு ஆக்சன் இயக்குனராக பணியாற்றியுள்ள ஸ்டண்ட் சிவா இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் பிரமிக்க வைக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அதிர வைக்கும் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் ஏழு சண்டை காட்சிகள் உள்ளன என்று ஒரு தகவல் வெளியாகி இருந்த நிலையில், ஸ்டண்ட் சிவா இப்படி கூறியுள்ளது ரஜினி ரசிகர்களிடம் இந்த படம் குறித்த ஆர்வத்தை இன்னும் அதிகமாக தூண்டியுள்ளது.