கடந்த மார்ச் 31ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் வெளியானது. இதுநாள் வரை நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரி இந்த படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார். அதேபோல விஜய்சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இளையராஜா இசையில் இரண்டு பாகங்களான உருவான இந்த படத்தின் முதல் பாகம் மட்டும் கடந்த வாரம் வெளியானது. படம் பார்த்துவிட்டு பல தரப்பிலிருந்தும் பாசிட்டிவான விமர்சனங்களே இந்த படத்துக்கு கிடைத்து வருகின்றன. இதனால் படக்குழுவினர் உற்சாகமாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிட்டு காட்டப்பட்டது.

படம் பார்த்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் மனமுவந்து பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

மேலும் இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விடுதலை இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்.. சூரியின் நடிப்பு பிரமிப்பு.. இளையராஜா இசையில் என்றும் ராஜா.. வெற்றிமாறன் தமிழ் திரை உலகின் பெருமை.. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த பாராட்டு படக்குழுவிற்கு மிகப்பெரிய உற்சாக டானிக்காக அமைந்துள்ளது. குறிப்பாக நடிகர் சூரி தலைவரின் இந்த பாராட்டுக்களை கேட்ட பின்னர், ‘என்ன சொல்றதுனே தெரியல தலைவரே.. நெஞ்சார்ந்த நன்றிகள்.. என் கால்கள் தரையில் இல்லை.. கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்தி உள்ளார் சூரி.