மணிரத்னம் சீடராக பணியாற்றிய ஆர் கண்ணன் ஜெயம் கொண்டான் படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து கமர்சியல் அம்சங்களுடன் மினிமம் கியாரண்டி படங்களை இயக்கி வந்தார். கடந்த 15 வருடங்களில் தொடர்ந்து ஒரு இயக்குனராக படங்களை இயக்கிக்கொண்டு திரையுலகில் நீடித்து வருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதை ஆர் கண்ணன் வெகு எளிதாக செய்து வருகிறார்.

கடந்த மாதம் கூட இவர் இயக்கிய தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் வெளியானது. தற்போது இந்த மாதம் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள காசேதான் கடவுளடா படம் வரும் மார்ச் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை ஆர்.கண்ணனே தயாரித்தும் இருக்கிறார்.

இந்தப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக இயக்குனர் ஆர்.கண்ணன் ஒரு தயாரிப்பாளராகவும் மாறி தனது படங்களை அவரே தயாரிக்க துவங்கினார். இதில் பெரிய அளவு நட்டத்தையும் சந்தித்தார்.

இந்த படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசும்போது இதனை குறிப்பிட்டு, “கண்ணன் சார் எனக்கு நீண்ட வருடமாகவே பழக்கம். லாக்டவுன் சமயத்தில் என்னை அழைத்து இந்த முறை படம் செய்தே ஆக வேண்டும் என்று சொன்னார். பெரிய படங்கள் எடுத்து அதை ரீமேக் செய்யும் பொழுது கண்டிப்பாக ஒப்பீடு இருக்கும் என்று தெரியும்.

அந்த பயத்தோடு தான் நாங்கள் இதனை எடுத்தோம். அந்தப் படத்தை இதைவிட சிறப்பாக யாராலும் எடுக்க முடியாது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவிற்கு நன்றாக கொடுத்திருக்கிறோம். யோகி பாபு சார், கருணாகரன் என இந்த படத்தில் நடித்த எங்கள் எல்லாருக்குமே இந்த டைட்டில் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

தயாரிப்பாளராக அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இயக்குநராக கண்ணன் அவரது பணியை இனிமேல் சிறப்பாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்” என்று கூறினார்.