இந்த வருடம் பிரமாண்ட பான் இண்டியா படங்கள் ஒருபக்கம் வெற்றி, வசூல் என பட்டையைக் கிளப்பினாலும் இன்னொருபக்கம் பீல் குட் மூவி ஆக எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் பெற்றது தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம்.

அந்த படத்தை தொடர்ந்து அடுத்த மாதமே அவர் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியாகி அந்த படமும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து வரும் டிசம்பர் இரண்டாம் தேதி தனுஷின் வாத்தி திரைப்படம் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் பிப்ரவரி 17ஆம் தேதிக்கு மாற்றி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதிலிருந்து தனுஷ் ரசிகர்கள் ஒரு தரப்பினருக்கு வருத்தமும் சிலர் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

காரணம் இந்தப் படம் தனுஷ் முதல்முறையாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி என்பவரின் டைரக்ஷனில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள முதல் நேரடி தெலுங்கு படமும் இது தான். அதேசமயம் தமிழிலும் இந்த படம் ஒரே நேரத்தில் தயாராகி உள்ளது.
அடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள் வெளியானதால், அவரது புதிய படத்தை இன்னும் சற்று இடைவெளிவிட்டு பார்க்கும்போது இன்னும் ஸ்பெஷலாக இருக்கும் என சில ரசிகர்கள், “நாங்கள் வெயிட்டிங்” என்று தம்ஸ் அப் காட்டுகின்றனர்.

இன்னும் சில ரசிகர்களோ தனுஷ் முதன்முதலாக தெலுங்கில் நடித்துள்ள படம் இது. அதுமட்டுமல்ல படத்தில் அவர் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதை விரைவில் பார்ப்பதற்காக ஆவலாக இருந்தோம்.. இப்படி தேதியை மாற்றி வைத்து விட்டார்களே என தங்களது வருத்தத்தையும் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள்.
இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வாத்தி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவார் என எதிர்பார்ப்போம்.

















