V4UMEDIA
HomeNewsKollywoodஇது உண்மையிலேயே கனவில்லையே..? ; பிரமிப்பு விலகாத லவ்டுடே இயக்குனர்

இது உண்மையிலேயே கனவில்லையே..? ; பிரமிப்பு விலகாத லவ்டுடே இயக்குனர்

தமிழ் சினிமாவில் பொதுவாகவே பல திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் தவறாமல் பேசுவது என்னவென்றால் சின்ன பட்ஜெட் படங்கள்தான் தமிழ் சினிமாவை வாழ வைக்கும்.. சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் முன்னுரிமை கொடுப்பதில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழில் வெளியான லவ்டுடே திரைப்படம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்றாலும் குறைந்த பட்ஜெட் செலவிலேயே தயாரானது.

கோமாளி என்கிற ஒரு வெற்றிப் படத்தை மட்டுமே கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அந்த படத்தின் மூலம் கிடைத்த புகழை வைத்துக்கொண்டு தானே கதாநாயகனாக மாறி தனக்காக லவ்டுடே என்கிற ஒரு கதையை தயார் செய்து அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இயக்கி நடித்தார்.

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தற்போது பல ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை தயாரித்த செலவுடன் ஒப்பிடும்போது அதைவிட நான்கு மடங்கு லாபம் இப்போதே வந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்திற்கு மட்டும் எப்படி தியேட்டர்களில் அதிக அளவு முன்னுரிமை தந்தார்கள் என்ற கேள்வி எழலாம். கோமாளி என்கிற படத்தை இயக்கியதால் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட டிரைலர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

அந்த ட்ரெய்லர் தான் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி குறிப்பாக இளைஞர்களை தியேட்டவர்களுக்கு இழுத்து வந்தது. அதற்கேற்றபடி இரண்டே கால் மணி நேர படமும் ரசிகர்களை இடைவிடாமல் சிரிக்க வைக்கும் விதமாக இருந்தது.

ஒரு படத்தை எடுப்பதைவிட அந்த படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு சொல்லும் விதமாக ஒரு ட்ரெய்லரை உருவாக்குவது என்பது மிக கடினமான வேலை. அதை சரியாக செய்து விட்டால் அதுவே படத்திற்கு மிகப்பெரிய புரமோசன் ஆகவும் பப்ளிசிட்டி ஆகவும் அமைந்து விடும் என்பதை இந்த லவ் டுடே படம் மூலம் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி குறித்து அவருக்கே இன்னும் பிரமிப்பு விலகவில்லை.. இதுகுறித்து தனது நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள அவர் கூறும்போது, “இது  நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா ? நான் கேட்பதும் காண்பதும் நிஜமா ? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும் நள்ளிரவு காட்சிகளும் தியேட்டர் ஆக்கிரமிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை ஆனாலும் பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ்புல்லாக குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன்.

உங்கள் முகத்தில் விழும் சந்தோசமே எனக்கு சந்தோசம். அதுவே நான் விரும்பியது. தியேட்டர்களில் சத்தமும் மகிழ்ச்சியுமான உங்களுக்கும் நன்றி. நீங்கள் என்னை நேசிப்பதையும் என் மீது அக்கறை கொள்வதையும் ஆதரவு அளிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும் மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதை மட்டும் இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

Most Popular

Recent Comments