அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதன் சாரம் குறையாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் விதமாக திரைப்படமாக இயக்கி வெளியிட்டார் இயக்குனர் மணிரத்னம்.

அவரது இந்த முயற்சிக்கு பக்கபலமாக நின்று இந்த படத்தை தயாரிக்க உதவியது லைகா நிறுவனம். இந்த படம் எவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டதோ அதற்கு இரு மடங்கு மேலாக நல்ல வசூலையும் பெற்றுள்ளது. இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகவும் தன்னை இணைத்துக் கொண்டது.

இந்த நிலையில் இந்தப்படம் குறித்து தங்களது நன்றியை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்வதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இயக்குனர் மணிரத்னம் பேசும்போது ” எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. சுபாஸ்கரன் அவர்களை சந்தித்து, ‘பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க விரும்புகிறேன்’ என்று சொன்னேன். ரெண்டே நிமிடத்தில் சரி என்று சொல்லிவிட்டார். அவர் இல்லையென்று சொன்னால், இந்த படைப்பு உருவாகி இருக்காது. அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒரு குடும்பமாக தங்களின் ஒத்துழைப்பை அளித்தனர். அவர்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றால் இது நடைபெற்றிருக்காது. அதுவும் கொரோனா காலகட்டத்தில், உடல் எடையை அதிகரித்துக் கொள்ளாமல், சீராக பேணி பராமரித்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க இயலாது. இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியில் வந்து பார்க்கும்போதுதான் எத்தனை பேர் கடினமாக உழைக்கிறார்கள் என தெரிந்தது. சில தருணங்களில் இதுவே எனக்கு பயத்தையும் தந்தது. ஒவ்வொருவரும் என்னை நம்பி பணியாற்றும்போது, அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நினைத்துக் கொள்வேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் பேசுகையில், ”இதுபோன்ற பிரம்மாண்டமான படைப்பை தயாரிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக முதலில் மணிரத்னத்திற்கு நன்றி. மணிரத்னம் ஒரு லெஜன்ட். நான் சிறிய வயதில் மணிரத்னம் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ படத்தை பார்த்திருக்கிறேன். இன்று வரை அவர்கள் இருவரும் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை நேர்த்தியாக கையாண்டார். இந்தப் படத்திற்காக பணியாற்றிய ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், சீயான் விக்ரம் உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் லைகா குழுமத்தின் சார்பாக நன்றியை பதிவு செய்து கொள்கிறேன் என்றார்.