V4UMEDIA
HomeNewsKollywood35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் கமல்-மணிரத்னம்  

35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் கமல்-மணிரத்னம்  

இந்த வருடம் கமலின் வருடம் என்று தாராளமாக சொல்லலாம். காரணம் கடந்த 10 வருடங்களில் விஸ்வரூபம் என்கிற மிகப்பெரிய வெற்றி, பாபநாசம் என்கிற டீசண்டான வெற்றி என இரண்டு படங்களை தவிர்த்து அவர் நடிப்பில் வெளியான மற்ற ஒரு சில படங்கள் வரவேற்பை பெறவில்லை.

அதுமட்டுமல்ல அரசியல் பயணம், கொரோனா தாக்கம், பிக்பாஸ் நிகழ்ச்சி என அவர் பயணம் திசைமாறி விட்டதால் சினிமாவில் அவர் இனி தொடர்ந்து பயணிப்பது சந்தேகம் என்று சலசலப்பு எழுந்த நிலையில் இந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனையையும் படைத்து விட்டது.

அந்த வகையில் மீண்டும் தான் எப்போதுமே கிங் என நிரூபித்து விட்டார் கமல்ஹாசன். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட நின்று போய்விட்டதாகவே பேசப்பட்டு வந்த இந்தியன் 2 படமும் விக்ரம் படத்தின் வெற்றியால் மீண்டும் உயிர்பெற்று தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பொன்னியின் செல்வன் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்குகிறார் மணிரத்னம். இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 1987ல் கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படம் படைத்த சாதனைகள் பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதன்பிறகு 37 வருடங்களுக்கு பின் இந்த கூட்டணி இணைவது தற்போது பல மடங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமலின் 234 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி தயாரிக்கிறார். மேலும் இந்த நிறுவனத்துடன் மணிரத்னம், கமல் இருவருமே இந்த படத்தின் தயாரிப்பாளர்களாகவும் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular

Recent Comments