
கடந்த தீபாவளி பண்டிகை வெளியீடாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் வெளியானது. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் இந்த படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த கார்த்தியின் கதாபாத்திரத்தை விட உளவாளியாக நடித்திருந்த கார்த்தி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியான படங்களில் சர்தார் படம் நல்ல வசூலை பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிச்சந்திப்பை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்வில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் பேசும்போது சர்தார் படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டு. அது விரைவில் துவங்க இருக்கிறது. கம்போடியா நாட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறினார்.

கார்த்தி நடிப்பில் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்திற்கு இரண்டாம் பாகம் தயாராகி அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. அதேபோல கைதி படத்திற்கும் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி இருவருமே தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் மூன்று இரண்டாம் பாக படங்களில் நடிக்கும் ஹீரோ என்கிற புதிய பெருமை கார்த்திக்கு சேர்ந்துள்ளது.