முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்கிற படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் அறிமுகமான சமயத்தில் நடிகர் விஜய்யால் குட்டி அசின் என பாராட்டப்பட்டவர். அதேசமயம் மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்கிற பெயரில் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த வருடம் தமிழில் ஆர்கே சுரேஷ் ஜோடியாக விசித்திரன் என்கிற படத்தில் நடித்திருந்தார் பூர்ணா. அடுத்ததாக மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு-2, படம் பேசும் மற்றும் அம்மாயி ஆகிய படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில் பூர்ணாவுக்கும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஷனித் ஆசிப் அலி என்பவருக்கும் துபாயில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூர்ணா.

இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து பூர்ணா கூறும்போது, “துபாயில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது அவரை சந்தித்தேன். அதன்பிறகு கோல்டன் விசா பெறுவது சம்பந்தமாக ஒரு சில விவரங்களை கேட்பதற்காக அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன். அந்த சமயத்தில் அவருடன் நல்ல புரிதல் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த 2020ல் பூர்ணாவை திருமணம் செய்வதாக ஒரு கும்பல் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்ததும் போலீசார் உதவியுடன் அதிலிருந்து சாதுரியமாக அவர் தப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.