கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் ஜீவி 2 என்கிற படம் வெளியானது இது கடந்த 2019ல் வெளியான ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருந்தது. முதல் பாகத்தை போலவே கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல், அடுத்தடுத்த திருப்பங்களுடன் வெளியாகியுள்ள இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.. முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே கலைஞர்கள், தொழில்நுட்ப குழுவினர் என பலரும் இந்தப்படத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக இந்தப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக வெகு இயல்பாக நடித்துள்ள நாயகி அஸ்வினி சந்திரசேகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அஸ்வினி சந்திரசேகர் பெங்களூருவை சேர்ந்தவர். ஆர்க்கிடெக் படித்திருந்தாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்குள் நுழைந்தவர். முறைப்படி கிளாசிக் டான்ஸ் கற்றவர். தமிழில் இவர் நடித்த மெர்லின் என்கிற படம் வெளியாகியுள்ள நிலையில் ஜீவி-2 தவிர, கால் டாக்சி, மரகதக்காடு, டைட்டில், காதல் புதிது ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மாறிமாறி நடித்து வருகிறார். சமீபத்தில் கூட மலையாளத்தில் நடிகர் நிவின்பாலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் ‘நீ நீ போதுமே’ என்கிற பாடலில் நாயகனுடன் ரொம்பவே நெருக்கமாக நடித்துள்ளீர்களே என பலர் கேட்கின்றனர்.. அது கதைக்கு தேவையாக இருந்தது. அதனால் சில விஷயங்களில் துணிச்சலாக இருக்கவேண்டும். தவிர வலிந்து திணித்தது போன்ற காட்சிகள் எதுவுமே எடுக்கப்படவில்லை.
முதல் பாகத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என படத்தில் நடித்த சமயத்தில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.. அதிலும் இரண்டாம் பாகம் உருவாகும் என்றெல்லாம் நினைத்தே பார்க்கவில்லை.. எல்லாம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. முதல் பாகத்தில் எனது போர்ஷன் கொஞ்சம் குறைவு தான். காரணம் கதை பல கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து சுற்றி வந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரம் படம் முழுவதும் வரும் விதமாக கதை அமைந்ததில் எனக்கு சந்தோஷம்தான் என்று கூறுகிறார் அஸ்வினி சந்திரசேகர்