சிம்புவுக்கு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமானவர் சார்மி, அடுத்தடுத்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், ஒருகட்டத்தில் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அடுத்தததாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.
அந்தவகையில் இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வரும் சார்மி, சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருடன் இணைந்து தயாரித்திருந்தார்.
மிகப்பெரிய பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவான இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த தோல்வியால் அதிர்ச்சி அடைந்துள்ள சார்மி, சோசியல் மீடியாவை விட்டு தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “டென்ஷன் ஆகாதீர்கள் நண்பர்களே.. (சோசியல் மீடியாவில் இருந்து) ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன்.. மீண்டும் மிகப்பெரிதாக சிறப்பாக திரும்பி வருவேன். அதுவரை.. வாழுங்கள் வாழ விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளை கரன் ஜோஹருடன் இணைந்து மிகப்பெரிய அளவில் செய்து வந்த சார்மி, இந்த படத்தின் வெற்றியை மிகவும் எதிர்பார்த்தார் ஆனால் பட ரிலீஸுக்கு முன்பே படத்திற்கு கிளம்பிய எதிர்மறை பிரச்சாரம், பாய்காட் ட்ரெண்டிங் என சோசியல் மீடியாவில் வெளியான கருத்துக்கள் சார்மியை ரொம்பவே பாதித்தன.
குறிப்பாக படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அலட்சிய மனப்பான்மையுடன் நடந்து கொண்டது படத்தின் தோல்விக்கு இன்னொரு காரணமாக அமைந்து விட்டது என்கிற வருத்தமும் சார்மிக்கு இருப்பதாக அவரது வட்டாரத்தில் கூறுகிறார்கள். அதனாலேயே தற்காலிகமாக சோசியல் மீடியாவை விட்டு விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.