கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்கு பிறகு விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ஒன்று தியேட்டர் ரிலீஸாக வெளியாக இருக்கிறது. அது அஜய் ஞானமுத்து டைரக்சனில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் தான்.

இதற்கு முன் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் விக்ரம் நடித்த மகான் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்த நிலையில் கோப்ரா திரைப்படம் தியேட்டர்களில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதை முன்னிட்டு சென்னை மட்டுமல்லாமல் திருச்சி, மதுரை, கோவை என ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்குள்ள கல்லூரிகளில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை புரமோட் செய்து வருகிறார் விக்ரம். அவர் மட்டுமல்ல.. படத்தில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட மூன்று கதாநாயகிகளும் இவருடன் சேர்ந்து பம்பரமாக சுற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், “தலைவர் ஒரு வசனம் பேசுவார்.. கண்ணா இது வெறும் ட்ரெய்லர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர் பார்க்கப் போறீங்க” என்று சொல்வார்.

அதேபோல நான் இப்போது வரை இந்த படத்தின் ட்ரெய்லரை மட்டும்தான் பார்த்து உள்ளேன். மெயின் பிக்சரை இன்னும் நான் பார்க்கவில்லை.. ஆனால் இந்த ட்ரெய்லர் உங்களை எவ்வளவு உற்சாகமும் சந்தோஷமும் படுத்தியதோ, அதே அளவிற்கு மொத்த படமும் உங்களை உற்சாகப்படுத்தும் என்பது மட்டும் உறுதி” என்று கூறினார்.