மாநாடு படத்திற்கு முன்பு இருந்த சிம்பு வேறு, இப்போது இருக்கும் சிம்பு வேறு என சொல்லும்விதமாக் தான் ஒப்புக் கொண்ட படங்களுக்கு குறித்த நேரத்தில் சொன்னபடி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் சிம்பு. குறிப்பாக மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றி அவருக்கு மீண்டும் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ்சினிமா தனக்கு வழங்கியுள்ள இடத்தை மிகச்சரியாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்த சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஏற்கனவே சீரான இடைவெளிகளில் நடித்து வந்த 10 தல படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் துவங்கியது. இந்தநிலையில் அங்கே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சென்னை திரும்பியதும் சில நாட்கள் கழித்து இங்கே மீதி படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற முப்தி என்கிற படத்தின் ரீமேக் ஆக இந்த படம் உருவாகி வருகிறது. ஒப்லி கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். கவுதம் கார்த்திக் இன்னொரு கதாநாயகனாக நடிக்க பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




















